பக்கங்கள்

வெள்ளி, 19 அக்டோபர், 2018

பாரத பாத்திரங்கள் (12)

கிருஷ்ணன்

கருப்பன். பாண்டவர்களுக்கு அனுசரனையாக இருந்தவன். அவர்களுக்காகவே அனைத்து வகை சூதுகளையும் செய்தவன். செய்ய வைத்தவன்.
போரிட மறுத்த அர்ச்சுனனைப் போரிடத் தூண்டியவன். அதர்மங்களைத் தர்மம் போலப் பேசியவன். அந்தப் போரை நடத்தியவனே அவன்தான்.
வனவாசம் முடித்த பாண்டவர்கள் சார்பாகத் தூது போனான். தூது எனும் பெயரிலான சூது வெற்றி பெறவில்லை. இவனே போரை அறிவித்து விட்டான்.
இவனுக்கு ஏது அதிகாரம்? யார் தந்தது அதிகாரம்? இவனே வரித்துக் கொண்டது. அகங்காரம்.
சத்திரிய ஜாதி தர்மம் பேசி போரிடத் தூண்டியபோது அவன் உளறியவை கீதைப் பாடல்கள். இடைச்செருகல், பாரதக் கதையில்.
நான்கு வர்ணங்களாக மக்களைப் பாகுபாடு செய்ததாகவும் பீற்றிக் கொண்டவன் இவன். அந்தந்த ஜாதிக்கும் தனித்தனிக் கடமைகள். அவற்றை மட்டுமே செய்ய வேண்டும். அடுத்த ஜாதியானின் கடமைகளைச் செய்யக் கூடாது என்றவன்.
போரை தன்னிச்சையாக அறிவித்தவன் தூதுபோன கிருஷ்ணன். சூதுத் திட்டம் வகுக்கிறான். முதலில் கர்ணனைப் பார்க்கிறான். குந்திக்கு சூரியன் மூலமாகப் பிறந்தவன் கர்ணன் என்பதைக் கூறுகிறான்.

துரியோதனனை விட்டு விலகத் தூண்டினான். கர்ணன் எவ்வித சபலமும் இன்றி மறுத்துவிட்டான்.
இந்தக் கிருஷ்ணனின் 18 ஆயிரம் மனைவியரில் ஒருத்தி ராதை. அவள் பெயரைச் சேர்த்தே இவனை ராதாகிருஷ்ணன் என்பார்கள். ராதை கிருஷ்ணனின் அத்தை. அத்தையுடன் கள்ள உறவு கொண்டவன். மணமாகாமலே குடும்பம் நடத்திய குணக்கேடன்.
போரில் வெற்றி பெறக் களப்பலி கொடுங்கள். போர்த் தெய்வம் காளிக்கு காணிக்கை கொடுங்கள். அவளின் வேட்கையைத் தீர்த்து வையுங்கள் என்றவன் கிருஷ்ணன்.
நரபலி தந்தால்தான் யுத்த தெய்வ கடாட்சம் கிடைக்கும் என்றால் தெய்வங்கள் பண்டமாற்று வணிகர்களா?
நரபலிக்குத் தகுதி 32 லட்சணங்களும் பொருந்தியவனாக இருக்க வேண்டுமாம். அப்படி இருந்தவன் கிருஷ்ணனே. ஏன் அவனைப் பலி கொடுக்கவில்லை? விடை இல்லை.
அடுத்து அமைந்தவன் அர்ச்சுனன். அவன்  போரிட வேண்டியவன். பலியிட முடியாது.
மற்றொருவன் அர்ச்சுனனின் மகன். அரவான். உலுப்பி என்பவளோடு அர்ச்சுனன் கொண்டிருந்த தொடர்பின் பலன். பலியாகச் சம்மதித்தான்.
அவனுக்கொரு ஆசை. சாவதற்குள் பெண் போகம் அனுபவிக்கும் ஆசை. ஒரு நாள் புணர்ந்து, மறு நாள் விதவையாக எவள் வருவாள்? கடவுள் கிருஷ்ணனே பெண்வேடம் போட்டான்.
இது ஒன்றும் புதிதல்ல.
பத்மாசுரனிடமிருந்து பரமசிவனைக் காப்பாற்ற மோகினி வேஷம் போட்டு அரிகரபுத்திரனைப் (அய்யப்பன்) பெற்றவன்.
நாரதனிடம் புணர்ந்து 60 குழந்தைகளைப் பெற்று அவற்றின் பெயரால் 60 ஆண்டு-களுக்குப் பெயர் வைக்க உதவியிருக்கிறான்.
அரவானின் மனைவி மோகினியாக. இரவு முழுவதும் புணர்ந்து சுகம் பெற்றான். அரவானுக்குச் சுகம் தந்தாள். விடிந்ததும் விதவையானாள். அர்ச்சுனனின் மகன் அரவான் பிணமானான். கடவுள் கிருஷ்ணனின் சொல் கேட்டதால்...
மற்றொரு மகன் அபிமன்யு கொல்லப்-பட்டதும் கிருஷ்ணனின் யோசனையைக் கேட்டதால்.
அதுபோலவே கெடு யோசனையைக் கேட்டதால் பீமனும் தன்மகன் கடோத்கஜனை இழந்தான்.
அறிந்தே கடவுள் கிருஷ்ணன் நடத்திய கொலைகள்.
அவன் சொல்படி தர்மன் சொன்ன பொய்யால் துரோணன் கொல்லப்பட்டான். எத்தனை கொலைகள். எல்லாவற்றிற்கும் கிருஷ்ணனே காரணி!
கர்ணன் எய்த நாகாஸ்திரம் அர்ச்சுனனைத் தாக்க முடியாதவாறு தேரோட்டி கிருஷ்ணன் தேரைப் பள்ளத்தில் இறுத்தி விட்டான். அர்ச்சுனன் தப்பிவிட்டான்.
பள்ளத்தில் சிக்கிய தன் தேரைத் தூக்க கர்ணன் முயற்சித்தபோது அவன் மீது அம்பெய்தியவன் அர்ச்சுனன். யுத்த தர்மம் மீறி அவன் செயல்படத் தூண்டியவன் கடவுள் கிருஷ்ணன். கொலைக்குத் தூண்டுகோல். பெருங்குற்றவாளி.
கிருஷ்ணன் வேண்டுமென்றே கீழே போட்ட மோதிரத்தை எடுத்துக் கொடுத்த அசுவத்தா-மனிடம் சில சைகைகள் காட்டினான். பார்த்தவர்கள் அசுவத்தாமனுக்கும் கிருஷ்ணனுக்கும் “ஏதோ’’ கமுக்கத் திட்டம் என்று நம்பச் செய்து அசுவத்தாமன் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்தான். இந்த மித்ரபேதம் கடவுள் எனப்படுபவனுக்குத் தகுதியானதா?
குந்தியைக் காட்டித் தாய்ப் பாசத்தைத் தூண்டி வரம் வாங்கி அவன் சாவுக்குக் காரணியானான். கடவுள் செய்யத்தக்க செயலா இது?
கதாயுதப் போரில் இடுப்புக்குக் கீழ் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது முறை. பீமனைத் தூண்டி தொடைகளுக் கிடையே அடிக்கச் செய்து துரியோதனனைக் கொன்றவன் கிருஷ்ணன். யுத்த தர்மம் மீறுவதும் ஜாதி தர்மம் காப்பதும் கடவுள் செய்கிற காரியமா?
சாவதற்கு முன்பு கூட சதி! பதவி வேண்டாம் என்றான் தர்மன். வற்புறுத்தி முடிசூடச் செய்தவன் கிருஷ்ணன்.
பீஷ்மரைக் கொல்வதற்காக சிகண்டியைப் பயன்படுத்தினான் கிருஷ்ணன். பெண்ணைத் தாக்க ஆயுதத்தைத் தூக்க பீஷ்மர் தயாராக இல்லாத சந்தர்ப்பத்தில் அவனைக் கொல்லச் செய்தவன் கிருஷ்ணன்.
சக்கரவியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யூவைக் காப்பாற்ற எதுவும் செய்யாமல் அர்ச்சுனன் மகன் கொல்லப்படக் காரணி கிருஷ்ணன். தன் தங்கை மகனையே காப்பாற்றாத கயவன் கிருஷ்ணன்.
பீமனின் மகன் கடோத்கஜன் சாவுக்கும் காரணி அவனே.
துரோணனை வெல்ல முடியாது. அவனது தந்தைப் பாசம் பலரும் அறிந்ததே. அவன் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக தர்மனைப் பொய் பேசச் செய்து துரோணன் நிலை-குலைந்தபோது கொல்லப்படக் காரணி கிருஷ்ணனே.
பாண்டவர்கள் பேசிய தர்மம் அவர்கள் சார்பானது. நடுநிலையானதல்ல. அதையே பேசியவன் கிருஷ்ணன்.
தேரை விட்டுக் கீழே இறங்குமாறு கிருஷ்ணன் கட்டளையிட்டான். கடவுளல்லவா! அர்ச்சுனன் பணிந்தான். இறங்கினான். பிறகு கிருஷ்ணனும் இறங்கினான்.
அந்தக் கணத்தில் தேர் எரிந்தது. எண்ணெயோ தீயோ இல்லாமல் தேர் எரிந்து சாம்பலானது.
எப்படி இப்படி எனக் கேட்டான் அர்ச்சுனன்.
இந்தத் தேரில் சாரதியாக இருந்து ஏகப்பட்ட அயோக்கியத் தனங்களை நான் செய்தேன். அதனால் எரிந்தது என்றான் கிருஷ்ணன்.
இதுவரை தேருக்கு ஒன்றும் ஆகவில்லையே எப்படி? எனக் கேட்டான் அர்ச்சுனன்.
நான் தேரில் இருந்ததால் தீப்பிடிக்கவில்லை. நான் இறங்கியதும் எரிந்துவிட்டது.
அதனால்தான் உன்னை முதலில் இறங்கச் சொன்னேன். நான் பின்னர் இறங்கினேன். இல்லாவிட்டால் நீயும் தேருடன் சேர்ந்தே எரிந்திருப்பாய் என்றான் கிருஷ்ணன்.
அவனே ஒப்புக் கொண்டபடி எங்கும் காணமுடியாத கயவன். கொடூரன். அயோக்கியன். தன் முனைப்புக்காக யாருக்கும் எதையும் செய்யத் தயங்காதவன் கிருஷ்ணன்.
(நிறைவு)
- சு. அறிவுக்கரசு
- உண்மை இதழ், 16-31.10.18

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பாரதப் பாத்திரங்கள் (11)

துரியோதனன்

அரண்மனையில் ஒரு நாள் தன் கணவனின் நண்பன் கர்ணனுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தாள். துரியோதனன் வருவதைப் பார்த்துவிட்டாள். எழுந்தாள் மரியாதை காரணமாக. தோற்றுப் போவதை உணர்ந்து எழுந்து போவதாக எடுத்துக் கொண்டான் கர்ணன்.

துரியோதனன் வரும் திசையைப் பார்க்க இயலாத திசையில் அவன் இருந்தான். “எங்கே ஓடுகிறாய்?’’ என்றவாறு எட்டிப் பிடித்தான். அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலாபரணம் அறுந்து முத்துக்கள் சிதறிவிட்டன.

அருகில் துரியோதனன் வந்துவிட்டான். இதனைக் கண்டுவிட்டான். கர்ணன் பயந்துவிட்டான்.

கலகலவெனச் சிரித்துக்கொண்டே, இருவரையும் பார்த்த துரியோதனன், “எடுக்கவோ, கோக்கவோ’’ என்று கேட்டான்.

தன் மனைவியை அவன் அறிவான். தன் நண்பனையும் அவன் அறிந்தவன். அதனால் அப்படிக் கேட்டான். பெருந்தன்மையானவன்.

பிரிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்த மன்னனாகி விட்டவன் தர்மன். அசுவமேத யாகம் செய்து மாமன்னனாக முடிசூட்டப்பட்டவன். ஆனாலும், மகா சூதாடி, சூதாடுதல் சத்திரிய தர்மம்.

சூதாட அவனை அழைக்கவே சகுனியுடன் ஆடினான். அனைத்தையும் தோற்றான் தர்மன். நிபந்தனைப்படி வனவாசம், அஞ்ஞாத வாசம் தொடர்ந்தது.

திருதராஷ்டிரனின் மக்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி. பாஞ்சாலியின் அடக்கமற்ற தன்மைக்கும் ஆணவத்திற்கும் ஆப்பு வைக்கப்பட்டதால் மகிழ்ச்சி.

யாகத்திற்கு அழைக்கப்பட்ட துரியோதனன் ஒரு மன்னன். தர்மன் வகையறாவின் விருந்தாளி. அவனைக் கேவலப்படுத்திய கெடுமதி கொண்டவள் பாஞ்சாலி. தனக்குப் பார்த்திருந்த சுபத்திரையை கிருஷ்ணன் சூதாக அர்ச்சுனனுக்கு மணம் முடித்துவிட்டான். இப்போது கிருட்டிணனின் மகன் சம்பா தன் மகள் இலட்சுமணியை விரும்புவதை அறிந்த துரியோதனன் கோபப்பட்டான். மறுத்தான்.

அப்பனைப் போலவே, சம்பா இலட்சுமணியை அடைய துரியோதனனின் அரண்மனைக்குள் நுழைந்தான். காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

இதை அறிந்த கிருஷ்ணனின் அண்ணனும் துரியோதனனின் நண்பனுமான பலராமன் துடித்தான்.

துரியோதனன் கைதி சம்பாவை விடுதலை செய்து பலராமனின் நட்பைத் தக்கவைத்துக் கொண்டான். தன் மகளைக் கட்டிக் கொடுத்து கிருஷ்ணனின் ஊருக்கு அனுப்பி வைத்தான்.

பெண்மைக்கும், பெண் மனதுக்கும் மரியாதை தந்தவன். கிருஷ்ணன் போல பெண் லோலன் அல்லன். பாரதப் போரில் தன் தம்பியர் 99 பேரையும் இழந்துவிட்ட நிலையில் தன் உடல் காயங்களைக் கழுவிக் கொள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த தர்மன், துரியோதனனை சண்டையிட அழைத்தான்.

“எனக்கு நாடு வேண்டாம். மணிமுடி வேண்டாம். அனைவரையும் இழந்திருக்கும் எனக்கு எதுவும் வேண்டாம். நீயே எடுத்துக்கொள்’’ என்றே கூறிவிட்டான்.

தர்மன் ஏற்கவில்லை. வலுச் சண்டைக்கு இழுத்தான். “பீமனோடு சண்டை போடு’’ என்கிறான்.

ஜாதி தர்மம் மீண்டும். சண்டையிட சத்திரியன் தயங்கவோ மறுக்கவோ கூடாது. போட்டனர். இரு துடைகளுக்கிடையில் பீமன் தாக்கித் துரியோதனனைக் கொன்றான். காரியம்தான் பீமன். காரணம் கிருஷ்ணன்.

போருக்கு முன்பு தன் தாய் காந்தாரியிடம் ஆசி வாங்க ஆசைப்பட்டான் துரியோதனன்.

குருடனைக் கட்டிக் கொண்டதால், தன் கண்களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவள் காந்தாரி. துரியோதனனைப் பார்க்க வேண்டும் என்று வரச் சொல்கிறாள். குளித்துவிட்டு அம்மணமாக வா என்கிறாள். அவனும் அப்படியே வந்தான்.

அந்த நேரத்தில் அங்கு வந்த கிருஷ்ணன் துரியோதனனைக் கேலி பேசுகிறான். தாய் என்றாலும்கூட, வளர்ந்த மகன் இப்படிப் போகலாமா என்கிறான். வெட்கப்பட்ட துரியோதனன் வாழை இலையால் தன் பிறப்பு உறுப்பை மறைத்துக்கொண்டு அம்மாவின் முன் நின்றான். கட்டப்பட்ட கண்களைப் பல வருடங்களுக்குப் பிறகு திறந்து பார்த்தாள். அவளின் பார்வை பட்ட உடல் பகுதிகளை எந்த ஆயுதமும் எதுவும் செய்ய முடியாதாம். எனவே அம்மணமாக வரச் செய்தாள்.

வாழையிலையால் மறைக்கப்பட்ட ஆண் குறிப் பகுதியைத் தவிர மற்றவற்றைக் காந்தாரி பார்த்தாள். அவை வன்மை பெற்றன.

பார்க்காத பகுதி பலவீனப்பட்ட பகுதி, அங்கே தாக்கும்படி பீமனுக்குச் சொன்னான் கபடனான கிருஷ்ணன். பீமன் செய்தான். துரியோதனன் இறந்துபட்டான். பீமன் செய்தது யுத்த தர்மமா? தர்மமாவது ஒன்றாவது. பாரதக் கதையில் ஒரே தர்மம்தான். வர்ண தர்மம். ஜாதி தர்மம். துரியோதனனின் உயிர் பிரியாத நிலையில் துரோணன் மகன் அஸ்வத்தாமன் வருகிறான். தன் தந்தையைக் கொன்ற திட்டத்துய்மனைத்  தான் கொன்றுவிட்டதைச் சொல்கிறான். பாண்டவர்களின் பிள்ளைகளை _ உப பாண்டவர்களைக் கொன்றதைக் கூறுகிறான்.

தனது எதிரிகள் பூண்டற்றுப் போனதைக் கேட்டால் பூரிப்படைவான் துரியோதனன் என்று சொன்னால்... பார்ப்பனர்கள் பாதகம் செய்ய மாட்டார்களே, நீங்கள் எப்படிச் செய்தீர்கள் இப்படி என்று கேட்டான் அவன்.

“பாதகம் செய்கை பார்ப்பன மக்களுக்கு

ஏதம் ஏதம் இது என் செய்தவாறெனா...”

என்று கேட்டான் என்கிறார் பாரதம் பாடியவர்.

“சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று

என்ன வீரியம் என்னினைந்து என் செய்தாய்”

என்றும் கேட்டானாம்.

இந்தப் பாவத்தைக் கழுவிட தவம் செய்க என்று அறிவுரை கூறினான். அறவுரை பேசிய துரியோதனன். இத்தகைய நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன். அதனால்தான்,

“அரமடநல்லார் பலர் அள்ளி கொண்டெதிர் கொள அமரனான பின்

உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே’’ என்கிறான் பாரதம் பாடிய வில்லிபுத்தூரான். (பாரதம் _ ரவுப்திக பருவம் பாடல் 235)

தர்மன் பொய் சொல்லி நரகம் போகிறான். துரியோதனன் நற்செயல்களால் சொர்க்கம் போகிறான்.

பின்பற்றத் தகுந்தவன் எவன்?

நரகத்தில் தண்டனைக் காலம் முடிந்து சொர்க்கம் வந்த தர்மன் கண்ட காட்சி...

துரியோதனன் ஆசனத்தில்... அவன் தோளில் பாரிஜாத மலர்மாலை... அவன்மேல் பூமாரி... அழகிகள் வீணை வாசிக்க... சிலர் தேவாமிர்தத்தை ஊட்டிட... 99 தம்பிகளும் உடன் இருந்திட... மகிழ்வுடன்....

சோ.ராமசாமி எழுதினார்:... அஞ்சாமல் யுத்தத்தைச் சந்தித்து போர் என்ற அந்த வேள்வியில் தன்னையே அர்ப்பணம் செய்து கொண்ட துரியோதனன், சத்திரிய தர்மத்தின் காரணமாக நற்கதி அடைந்து இங்கே வந்திருக்கிறான்.’’ (மகாபாரதம் மிமி பக்கம் 1268)

பாரதம் வற்புறுத்துவது ஜாதி தர்மத்தையே.

ஜாதி தர்மத்தை வலியுறுத்திட நடந்த பாரதக் கதைப் போரில் இறந்தோர் ஒரு கோடியே இருபது லட்சம் பேராம். போர் முடிவில் இருந்தோர் 24 ஆயிரம் வீரர்கள் மட்டுமே. போரின் முடிவு அஸ்தினாபுரத்தில் ஒரு கோடிப் பேருக்கு மேற்பட்ட பெண்கள் தாலி இழந்தனர். விதவைகள் ஆயினர்.

இது தேவையா? ஜாதி முறைக்கு வலுசேர்க்க... பாரதக் கதையா? பாதகக் கதையா?

ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்பட்ட கதையில் அறிவிக்கப்படும் நீதி அபத்தம் அல்லவா?

வியாசன் பாடியது 8800 பாடல்கள். வைசம்பாயன் அதை 24 ஆயிரமாக்கினான். பாரதம் என்று பெயரிட்டான். சூதன் என்பான் இலட்சம் பாடல்களாக்கிவிட்டான். மகாபாரதம் என்றான்.

இதில் இடைச் செருகல் கீதை. 700 பாடல்கள். எழுதியவன் எவன் என்று தெரியவில்லை.

ஆனால், மொத்தமும் ஜாதியை வளர்க்கவே.

(தொடரும்...)

- சு.அறிவுக்கரசு

- உண்மை இதழ், 1-15.10.18

வெள்ளி, 5 அக்டோபர், 2018

பாரதப் பாத்திரங்கள் ( 10 )

கர்ணன்


திரவுபதையின் சுயம்வரம். தற்போதைய பெண் பார்க்கும் படலம். பல இளைஞர்கள் வருவர். திறமையைக் காண்பிப்பர். விரும்பியவனுக்குப் பெண் மாலை இடுவாள்.

பார்ப்பனன் வேடத்தில் அர்ச்சுனன் அமர்ந்திருந்தான். அவனுக்கிணையான வீரனான கர்ணனும் அங்கே. அக்கால வழக்கப்படி வில்லில் நாணேற்றுவது போட்டி.

கர்ணன் எழுந்தான். வில்லில் நாணேற்றி விட்டான். போட்டியில் வென்றுவிட்டான். மணக்க வேண்டிய திரவுபதை மறுத்து விட்டாள். “தேரோட்டியின் மகனை மணக்க மாட்டேன்’’ எனக் கூறிவிட்டாள்.

கலந்து கொண்டோர் யாவராயினும் ஒன்றே.  யார் திறமையானவன் என்பதற்குத்தான் போட்டி. திரவுபதை ஏற்கவில்லை. சபையும் சும்மாதான் இருந்தது.

சபையோரையும் திரவுபதையையும் ஏளனமாகப் பார்த்துவிட்டு, தன் இடத்தில் அமர்ந்துகொண்டான்.

பின்னர் அர்ச்சுனன் திறமை வெளிப்பட்டது. அவனுக்கு மாலையிட்டாள் திரவுபதை.
அர்ச்சுனன் பார்ப்பன வேடத்தில் இருந்தான். அரசன் மகளுக்கு அட்டியில்லை. ஜாதி அடுக்கில் இவளுக்கு மேல்தட்டில் இடமாயிற்றே.

ஜாதி காரணமாகக் கர்ணன் ஒதுக்கப்படுவது இது புதிதல்ல. அவனுக்குப் பழகிப் போனது. அதைப் பற்றி அவன் கவலைப்பட்டது கிடையாது.

அவனை வளர்த்தவன் அதிரதன்_ தேரோட்டி. வளர்த்த தாய் ராதை. கிருஷ்ணனின் அத்தை. கிருஷ்ணனின் பல துணைவியரில் ஒருத்தி. ராதாகிருஷ்ணன்தானே! மணமாகாத உறவு. மணம் புரிந்துகொள்ள முடியாத உறவு. இருந்தாலும் கர்ணன் கேவலப்படுத்தப்பட்டான்.

கர்ணனின் இயற்கைப் பெற்றோர் யார்? சூரியனும் குந்தியும். திருமணமாகாத குந்தி சூரியனுடன் கூடிப் பெற்றவள். அசிங்கம். அதனை உணர்ந்த குந்தி ஒரு பெட்டியில் பெற்ற குழந்தையைக் கிடத்தி கங்கை நதியின் ஓடும் நீரில் விட்டுவிட்டாள். அதிரதனும் ராதையும் வளர்த்தனர்.
கர்ணனுக்கு அவர்கள்தான் தாயும் தந்தையும். திரவுபதையின் சுயம்வரத்தில்கூட அதிரதனைக் கண்டு, “தந்தையே’’ என்று பாராட்டிப் பணிந்தவன். அதிரதன் சூதர் குலம். கர்ணன் மனைவியும் அதே குலம்.

பரசுராமனிடம் வில்வித்தை கற்றவன். ஜாதியின் காரணமாக, தான் பெற்ற வித்தை பலனளிக்காமல் போகக் கடவது எனும் சாபமிடப்பட்டவன்.

ஜாதியை மறைத்தவனல்லன். வாய்ப்புகளை ஜாதி அவனுக்கு மறுத்தது. ஆகவே பொய் சொல்லி பரசுராமனிடம் மாணவனானவன்.

வேடனான ஏகலைவனுக்கு வித்தை சொல்லித்தர மறுத்த துரோணன் ஜாதி மாணவர்களாக நூற்றைந்து பேர்களுக்குப் பயிற்சிஅளித்து போட்டி ஒன்றை நடத்தினான். முன்னிலையில் அர்ச்சுனன் பாராட்டு பெற்றான். அப்போது ஒர் அறைகூவல். கூவியவன் கர்ணன்.
மார்பில் கவசம். காதுகளில் குண்டலங்கள். அழகிய முகம். தோற்றம் பொலிவு. யாரென அறியாத நிலை என்றாலும் துரோணன் அனுமதிக்கிறான்.

அர்ச்சுனன் ஆவேசப்பட்டான். போட்டியாளனனைக் கண்டு பயப்படுபவன் எப்படி திறமையானவன்? கற்ற வித்தையை அர்ச்சுனன் காட்டினான். அவை அத்தனையையும் கர்ணனும் செய்து காட்டினான். “சபைக்கு அழைக்கப்படாமல் வந்தோரும், கேட்கப்படாமல் பேசுவோரும் இகழப்படுவார்கள்’’ என்கிறான் அர்ச்சுனன்.

“பல்குணா! இந்தச் சபை எல்லார்க்கும் பொது. உனக்கே உரிமையானதல்ல. ராஜதர்மமும் பலத்தைப் பின் தொடர்ந்தே செல்கிறது. வெறும் பேச்சில் என்ன இருக்கிறது? பாணங்களைக் கொண்டு பேசு’’ என்கிறான் கர்ணன்.

இவ்வாறு கர்ணன் அர்ச்சுனனை யுத்தத்திற்கு அழைத்ததும் சனக் கூட்டம் குதூகலங்கொண்டு இரண்டு கட்சியாய்ப் பிரிந்தது. பெண்களிலும்கூட இரண்டு கட்சிகள் உண்டாயிற்று. உலகம் எப்போதுமே இம்மாதிரிதான்.’’ (ராஜாஜி _ மகாபாரதம் -_ பக்கம் 49)

அப்போது ஜாதிக்குரல். கிருபாச்சாரி எழுந்து பேசுகிறார்: “அர்ச்சுனனோ பாண்டுவின் மகன். முதலில் நீ எந்த ராஜ்யத்தின் அதிபதி என்று சொல். உன் குலம் யாது? பெருமையற்ற பரம்பரையில் வந்தவர்களோடு அரசகுமாரர்கள் சரிசமமாக நின்று யுத்தம் செய்வதில்லை. முதலில் உன்னை அறிமுகம் செய்துகொள்!’’ (பக்.49)

கர்ணனுக்குச் சங்கடம். துரியோதனன் எழுந்து பதில் கூறுகிறான். கர்ணனைப் பற்றி எதுவுமே அறியாதவன். என்றாலும் கூறினான்.



“கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும்

வண்மை கை/ உற்றவர்க்கும் வீரரென்று

உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக் / கொற்றவர்க்கும்

உண்மையான கோதின் ஞான சரிதராம்

மற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால்”

(வில்லிபுத்தூரார் பாரதம் - ஆதிபர்வம் - 342)

“படித்தோர், கன்னியர், ஈகையர், செல்வமிகு மன்னர், வீரர், அறிஞர் முதலியோர்க்கு ஜாதி ஒன்றுதான். உயர்வு தாழ்வு கிடையாது’’ என்று துரியோதனன் கூறுகிறான். அர்ச்சுனன் தன்னை ஒப்பாரும், மிக்காரும் யாரும் இல்லா வீரன் போல அகந்தை வெளியிடப் பேசுவது துரியோதனுக்குப் பிடிக்கவில்லை போலும்! 

பாண்டவர் பக்கம் இருக்கும் பீஷ்மன், துரோணன், கிருபன் ஆகியோர் ஜாதிப் பெருமை, குலப் பெருமை பேசுவது கண்டு துரியோதனன் அசூயைப்பட்டுக் கர்ணனின் பக்கம் பேசினானோ? வில்லிபுத்தூரார் கேட்கிறார் _ “தூணிடத்தில் பிறந்த ஹரியும் (நரசிம்ம அவதாரம்), அழகிய பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் மோகித்து பரத்வாஜன் சிந்திய விந்து வைக்கப்பட்ட குவளை (துரோண்)யில் பிறந்த துரோணனும் அகத்தியனும் முருகனும் பெருமைக்குரிய பிறப்பில் வந்தவர்களா?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார். (பாடல் 343)

கடவுள், விஷ்ணு, முருகன், கழுத்திலேயே கத்தி வைத்து விட்டார். பார்ப்பனச் சிரேஷ்டர்களான துரோணன் (துரியோதனனின் குரு) அகத்தியர் ஆகியோரின் அடிமடியில் கை வைத்துவிட்டார் தமிழில் பாரதம் பாடிய வில்லிபுத்தூர் ஆழ்வார். சங்கடம்தான். பாரதம் எழுதிய சோ.ராமசாமி மற்றொன்றையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். “பாண்டவர்களாகிய உங்களுடைய பிறப்பு எவ்வகைப்பட்டது என்ற எல்லோருக்கும் தெரியும்’’ (மகாபாரதம். ஆதி. பக்.107)

திருடியவனே, “திருடன், திருடன்’’ என்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போல, இழிந்த பிறப்பினரே கர்ணன் பிறப்பின் இழிவு பற்றிப் பேசுவது கொடுமை அல்லவா?

அதனை விளக்கியவன் துரியோதனன்.

கிருபனின் இரண்டாம் குற்றச்சாட்டு, கர்ணன் எந்த நாட்டு அரசன்? “சூதன் மதலை தன்னை அங்க ராசன் ஆக்கினான்’’ (பாடல் 344)

பின் என்ன தடை? அர்ச்சுனனோடு கர்ணன் மோதினானா? போட்டி தொடர்ந்ததா?
இல்லை.

அந்த நேரத்தில் அதிரதன் அங்கே வருகிறான். கர்ணன் ஓடோடிப் போய்த் தந்தையைப் பணிகிறான். பார்த்த பீமன், கர்ணனைப் பார்த்து, “வில்லைக் கீழே போடு _ குதிரைச் சவுக்கை எடுத்துக் கொள். குதிரை ஓட்டு’’ என்கிறான்.

உடலை வளர்த்தான். அறிவை வளர்த்தானில்லை. கர்ணனும் அர்ச்சுனனும் கதைப்படி பெருவீரர்கள். கர்ணனோ நிகரற்ற கொடைத்தன்மை கொண்டவன். அவனுடைய கொடைத்தன்மையால்தான் அவனது இறப்பே நிகழ்ந்தது. அவனது கொடைத்தன்மையால் அவன் பெயர் நிலைத்து விளங்குகிறது-.

அர்ச்சுனனுக்கு சூது வழியும் பித்தலாட்டங்களும் வெற்றி தேடித் தந்தன. வெற்றியா அது? அவமானகரமான செய்கை அல்லவா? 

வீழாத வீரன் _ கர்ணன் வீழ்ந்தான். கொடைத் தன்மையால் வீழ்ந்தான். கிருஷ்ணனின் ஆசை காட்டலுக்கு மயங்காதவன், குந்தி வரம் கேட்டபோதும், இந்திரன் பிச்சை கேட்டபோதும், கொடுக்கக் கூடாதவற்றைக் கொடுத்து கொடை மடம் பட்டதால்... வீழ்ந்தான்.

(தொடரும்)

- சு.அறிவுக்கரசு

-உண்மை இதழ், 1-15.9.18

பாரதப் பாத்திரங்கள் (9)

பரசுராமன்

சு.அறிவுக்கரசு

y7.jpg - 31.92 KB

பார்ப்பனன் மற்ற ஜாதியரை வெறுப்பவன். அதிலும் அரசர்களாக இருக்கும் சத்திரியர்களைக் கூடுதலாக வெறுப்பவன். சத்திரியர்களையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்றவன். முயன்றவன். பார்ப்பனர் குருவாக இருந்தாலும் தட்சணை தருபவன் சத்திரியன். ஆலோசனை தருபவனாகப் பார்ப்பனர் இருந்தாலும் ஆட்சி நடத்துபவன் சத்திரியன். அடங்கிப் போக வேண்டியவர்கள் பார்ப்பனர்கள்.

வேதமோதவும் வேள்வி நடத்தவும் சத்திரியனின் உதவிதான் தேவை. பணத்திற்கும் அவனே. பாதுகாப்பிற்கும் அவனே.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் _ என்று வள்ளுவமே  கூறுவதால், விளக்கம் வேண்டா.

அரசன் உதவி இல்லாவிட்டால், பார்ப்பனர் வேத நூலையே மறந்து விடுவர் (குறள் 560). ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் என்னும் நான்கையும் மறந்து ஈதல், ஏற்றல் எனும் பிச்சைத் தொழிலைத்தான் செய்திட வேண்டும். தெருப்பிச்சை கிடைக்காவிட்டால், சூத்திரரின் களத்து மேட்டில் சிந்தியுள்ள நெல்மணிகளைப் பொறுக்கிப் பொங்கிச் சாப்பிட வேண்டும் என்கிறது மனுதர்ம சாஸ்திரம்.

தன் தந்தை சொன்னான் என்பதற்காகத் தன் தாயைக் கொன்றவன்.

தன் வீட்டுப் பசுமாடு (காமதேனு) திருடு போனதற்காக கார்த்தவீரியனைக் கொன்றான். பழிக்குப் பழியாக பரசுராமனின் தந்தையைக் கார்த்தவீரியனின் மகன் கொல்கிறான். கணக்கு நேர், அல்லவா?

கோபம் பரசுராமனுக்கு. சத்திரிய ஜாதியையே கொன்றிடச் சபதம் எடுக்கிறான். ஆயிரக்கணக்கில் கொலைகள்.

அடங்காத ஆத்திரம். ஆரியர்க்குப் படைக்கலப் பயிற்சி அளிக்கிறான். வாள், வேல், வில் வித்தைப் பயிற்சி.

துரோணன் இவனின் மாணவன். சத்திரியனுக்குப் போர்ப்பயிற்சி தந்தவன். சூத்திரர்க்கு மறுத்தவன்.

பரசுராமன் பார்ப்பனர்க்கு அளித்தான். சத்திரியர்க்கு மறுத்தான்.

இருவருமே பார்ப்பனர்கள். இருவேறு மனோநிலை. வேதத்தை விட்டு யுத்தக் கலை போதித்தனர்.

படைத் தலைவர்களாகப் பல பார்ப்பனர்கள்  அந்தக் காலத்தில். அசோக மன்னரின் வழியில் வந்த மன்னன் பிருகத்ரதனின் சேனாதிபதி புஷ்யமித்ரன் பார்ப்பான். மன்னனைக் கொன்று மகுடம் சூட்டிக் கொண்ட துரோகி. பரசுராமனின் பரம்பரை.

இந்திய மன்னர்களிலேயே சூரியனைப்போல ஒளி வீசியவர் அசோகர் என்று உலகின் வரலாற்றாசிரியர்கள் புகழ்வர். அசோகரால் வளர்க்கப்பட்ட பவுத்த நெறிக்கு மாறானவன் புஷ்யமித்திரன். அவனின் துரோகத்தை நியாயப்படுத்தும் நோக்கமே கீதை எழுதப்பட்டதற்கான காரணம். பாரதக் கதையில் கீதை செருகப்பட்டதற்கும் அந்நோக்கமே காரணி என்பது ஆய்வாளர்களின் முடிவு.

பார்ப்பானல்லாத கர்ணன் மாணவனாகச் சேர்ந்து தன்னிடம் கற்றுக் கொண்டான் என்பதற்காக அவனைச் சபித்தவன் பரசுராமன். அவன் வித்தை துரோணன் வழி சென்றடைந்து சத்திரியர்களிடம் பார்ப்பன மேலாண்மையை ஏற்படுத்த விரும்பிய பரசுராமன் தோற்றுத்தானே போனான்?

உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன்

உறுபகை ஒடுக்கிப் போந்தேன்

சிலையை நீ இறுத்த ஓசை

செவியுறச் சீறி வந்தேன்

மலைகுவன் வல்லையாயின்

 


வாங்குதிவில்லை என்றான் _- எனக் கம்பன் பாடியவாறு சத்திரிய ராமனிடம் அறைகூவல் விடுகின்றான் பரசுராமன். முனிவர்களாக இருக்கும் பார்ப்பனர்களுக்கே உரியதாக இவ்வுலகை ஆக்கினேன். அந்நிலையில் ஜனகனின் வில்லை நீ முறித்த ஓசை என் காதில் விழவே, உன்னிடம் மோத வந்திருக்கிறேன் என்றானாம். கோபம் அடங்காத நிலை.

ஜனகன் மகள் ஜானகி -_ சீதை. அவளை மணக்க விரும்புபவன் தன்னிடமுள்ள பழைய வில்லில் நாண் ஏற்ற வேண்டும் என்பது ஜனகனின் நிபந்தனை. ராமன் வில்லைத் தூக்குகிறான். அது ஒடிந்து விழுந்தது. பழைய வில் அல்லவா?

எடுத்தது கண்டார், இற்றது கேட்டார் என்பார்கள். எடுத்ததும் தெரியவில்லை, ஒடிந்ததும் தெரியவில்லை. ஒடிந்த சப்தம் காதில் விழவே பரசுராமன் சண்டைக்குப் புறப்பட்டுவிட்டான். ராமன் பார்ப்பானைக் கொல்லக்கூடாது எனும் மனு சாஸ்திரப்படி பரசுராமனின் தவப் பெருமைகளை சிதைத்து வென்றான்.

பரசுராமன் தோற்றான். வாழ்க்கையில் முதன்முதலாகப் பெற்ற தோல்வி. அகந்தை அடங்கியது.

சத்திரியர் மீது பரசுராமன் ஏற்படுத்திக்கொண்ட பகை சத்திரிய ராமனால் தீர்க்கப்பட்டுவிட்டது.

புல் ஏந்தும் கைகளில் வில் ஏந்தினான். மீண்டும் புல் ஏந்தும் நிலை ஏற்படுத்தப்பட்டது. விரல் உரலாக விரும்பினால், இப்படித்தான் முடியும்.

பார்ப்பனரல்லாதவன் கர்ணன் எனத் தெரிந்து, அவன் கற்றுக்கொண்ட பிரம்மாஸ்திரம் நெருக்கடியான நேரத்தில் பயன்படாமல் போகட்டும் என்று சாபம் விட்டவன் பரசுராமன். அதனால் கர்ணன் போரில் மாள நேரிட்டது.

ஜாதியை மதிக்காமல் வீரத்தை மதித்தவன் கர்ணன். ஜாதிக்கு முக்கியம் தராமல், தேரோட்டி மகனான கர்ணனை அங்கதேசத்து அரசனாக ஆக்கிப் பெருமை அடைந்தவன் துரியோதனன்.

இவ்விருவரையும் தோற்கடிக்கக் காரணமாக அமைந்த பாரதப் போரில், பரசுராமனின் சாபம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வேறு வகையில் சொன்னால், பரசுராமனின் பார்ப்பன ஜாதி வெறி இடம் பெற்றுள்ளது.

ஜாதி / வர்ணம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்குடன் பாடப்பட்ட பாரதக் கதையின் தீய எண்ணம் நிறைவேற உதவியவர்களில் ஒருவன் பரசுராமன்.

மற்றவன் கிருஷ்ணன்.

மற்ற பாத்திரங்கள் “எக்ஸ்ட்ரா’’க்கள்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 15-31.8.18

பாரதப் பாத்திரங்கள் (6)

.அறிவுக்கரசு

தர்மன்



 

யுதிஷ்டிரன் என்பது பெயர். சூதாடி. சூதாடி அனைத்துச் செல்வங்களையும் இழந்தவன். தன் உடன் பிறந்தாரைத் தோற்றவன். தன்னைத் தோற்றவன். தன் நாட்டை சூதில் இழந்து நாடற்றவனானவன் தன் பெண்டாட்டி (மட்டுமே) என நினைத்துத் திரவுபதியைத் தோற்றவன். அய்ந்து பேரின் மனைவியை, தான் ஒருவன் மட்டுமே கலந்துகொண்ட சூதாட்டத்தில் பணயம் வைத்துத் தோற்றவன். மற்ற கணவர்களைக் கலக்காது பந்தயப் பொருளாகப் பாஞ்சாலியை வைத்தவன்.

சூதாடுவதில் பெரு விருப்பம் கொண்டவன். சூதாடுவது சத்திரியனுக்கு விதிக்கப்பட்ட கடமை என்றவன். இந்தக் கடமையை ஆற்றவே சூதாடினானாம். காலுக்குச் செருப்பு தைக்கத் தன் குழந்தையின் தோலை உரித்தவன். இவன் தரும புத்திரனாம்.

தாயத்தில் தோற்று வென்றவனுக்கு அடிமையாகிவிட்ட தர்மன் என் கணவனல்ல. அவனின் மனைவி நான் அல்லள். பின் யார் என்றால், மன்னன் துருபதனின் மகள் என்று திரவுபதை சொல்லுமளவுக்குத் தரம் கெட்டுப்போன சூதாடி.

சூதாடியதால் இறப்புக்குப் பின் நரகம் போனவன். இவனா தருமபுத்திரன்?

ஒற்றை மனிதனாக இருப்பவன் வேள்வியோ, வேறு சடங்குகளோ செய்யும் தகுதி பெற்றவனல்லன். ‘ஒற்றைப் பார்ப்பான் கெட்ட சகுனம்’ என்பதுகூட இதன் அடிப்படையில் தான். ஆகவேதான் கிழட்டுப் பார்ப்பனர்கள் கூடத் திருமணம் செய்துகொண்டு தகுதியைப் பெறுகின்றனர். அப்படி ‘வேள்வி மாது’ என்ற வகையில் வந்தவள்தான் மனைவி பாஞ்சாலி. அவள் எப்படி இவனது உடைமை ஆவாள்? உடைமை எனக் கருதிச் சூதில் பணமாக வைத்துத் தோற்றது தர்மமா? இவன் தர்மனா? அச்சொல்லுக்குத் தகுதியானவனா?

பாண்டவர்கள் கவுரவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாதி நாட்டை வாங்கி தனியரசாக ஆனபின்பு ராஜசூய யாகம் செய்திட ஆசை கொண்டனர். மன்னனான தர்மன் மாமன்னன் ஆக ஆசைப்பட்டான். யாகக் குதிரையைப் பல நாடுகளுக்கும் அனுப்புவார்கள். பயந்தவர்கள் பணிந்து கப்பம் கட்டுவார்கள். அஞ்சாதவர்களுடன் குதிரைக்குரியவன் சண்டையிட்டு வெல்லவோ தோற்கவோ வேண்டும்.

கிருஷ்ணனிடம் யோசனை கேட்டான் தர்மன். மகத நாட்டு மன்னன் ஜராசந்தனைப் பற்றிக் கூறித் தன்னால் பதினெட்டு முறை போரிட்டும் வெல்லமுடியாததைக் குறிப்பிட்டு அவனுடன் போரிட நேரிடும் எனக் கூறித் தயார்படுத்தினான், கிருஷ்ணன். நேரான போரில் _ நேர்மையான முறையில் அவனை வெல்ல முடியாது. சூழ்ச்சி செய்துதான் தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான் கிருஷ்ணன். அந்தப்படியே செய்தவன் தருமன். அவன் யோக்கியனா?

ஜராசந்தன் வீட்டுக்குப் பார்ப்பன வேடத்தில் பீமன் நுழைந்தான். ஜராசந்தனுடன் சாப்பிட்டான். மன்னனுடன் சண்டை போட வேண்டுமென்கிற ஆசையை பீமவேடப் பார்ப்பனன் கேட்டானாம். விருந்தாளியின் ஆசையை நிறைவேற்றுவது உபசரிப்பவனது கடமையாம் அக்காலத்தில். அதன்படி சண்டை நடந்தது. பீமன் ஜராசந்தனைக் கொன்று விட்டான். சூழ்ச்சியால் கொன்றது நேர்மையா? தருமன் நேர்மையானவனா?

எண்ணமும் அதனை அடையும் வழிகளும் ஒருசேர நேர்மையாக இருக்க வேண்டும். மாமன்னன் ஆவது நோக்கம். அதனை நிறைவேற்றிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தவனான தருமன், தர்மனா? அதர்மனா?

ஜராசந்தனிடம் தோற்றுக்கிடந்த சிற்றரசர்கள் ஆதரவுடன் மாமன்னனாகி விட்டான் தர்மன். இந்திரப் பிரஸ்தத்தில் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள். கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை. ஏன் என்று கேட்டான் சிசுபாலன். கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டான். முதல் பலி. இரத்தம் பூசிக் கொண்டது இந்திரப் பிரஸ்தம். இது தர்மமா?

தர்மம் வென்றாக வேண்டுமென்றால் வெல்லும் வழியும் தர்மமாக இருக்க வேண்டும் அல்லவா? இல்லையே?

அண்ணன் சொல்லைத் தட்டாமல் வளர்ந்தவர்கள் _ வளர்க்கப்பட்டவர்கள் பாண்டவர்கள். என்றாலும் பீமன் சிற்சில சமயங்களில் தர்மனைக் கடிந்ததுண்டு. சூதாடிப் பெண்டாட்டியைத் தோற்றபோது அவன் கையை எரித்துவிடுவோம் என்று கொள்ளிக் கட்டை கொண்டுவரச் சொன்னான் பீமன். அந்த நிலைக்கு அவனைத் துரத்தியவன் தர்மன். பாஞ்சாலி பீமனுக்கும் மனைவிதானே! தர்மன் மட்டுமே தனியாக ஏன் பணயம் வைத்தான்? அதர்மமல்லவா?

ஒற்றை ஆடையால் முகத்தை மூடிக்கொண்டு வனவாசம் புறப்பட்ட நிலை தர்மனுக்கு ஏற்படலாமா? அவன் பத்தினி பாஞ்சாலி தனது விரிந்த தலைமயிரால் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படலாமா? அவமானகரமான இந்த நிலை தர்மனால்தானே வந்தது?

சக்கரவியூகத்தில் சிக்கிக் கொண்ட தர்மன் ஓலமிட்டு அழுது தன்னைக் காப்பாற்றக் கூப்பாடு போட்டான். சக்கரவியூகத்தை உடைத்துக் காப்பாற்றப் போய் அபிமன்யூ மாட்டிக் கொண்டான். தர்மனோ, பீமனோ, கிருஷ்ணனோ, எவனும் காப்பாற்றவில்லை அவனை. போரில் கொல்லப்பட்டான், அபிமன்யூ. அவனைக் கொன்ற பழியை அர்ச்சுனன் தர்மன் மீதல்லவா சுமத்தினான்?

உங்களைக் காப்பாற்றத்தான் தெரியும், என்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதே என்கிறான் அபிமன்யு. எங்களைக் காப்பாற்று, நாங்கள் உன்னைக் காப்பாற்றுகிறோம் என்று தர்மன் சொன்னதால்தானே அபிமன்யூ முயற்சித்தான். காப்பாற்றப்பட்ட தர்மன் அபிமன்யூவைக் காப்பாற்றினானா? வாக்கைக் காப்பாற்ற வக்கில்லாதவன்தானே தர்மன்?

வியூகப் பாதையை சைத்ரதன் அடைத்து விட்டான். என்னால் காப்பாற்ற முடியவில்லை என்றானே தர்மன். இந்தப் பெட்டைப் புலம்பல் சரிதானா? கையாலாகாதவன் கூறும் நொண்டிச் சாக்கல்லவா?

துரோணனை நிலைகுலையச் செய்து சாகடிக்கத் திட்டம் போட்டு அவன் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் எனப் பொய் கூறியவன்தானே தருமன்?

அவன் பெரிய தர்மவானாம். அதனால் பெற்ற சலுகையின்படி அவனது தேர் தரையில் படாமல் ஓடுமாம். தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில்தான் தேர் உருளுமாம். பொய் சொன்னதும் இந்தச் சலுகை பிடுங்கிக் கொள்ளப்பட்டுவிட்டதே. கைமேல் பலன்.

ஆசாபாசங்களுக்கு ஆள்பட்டுவிட்ட சாதாரண ஆள்தான். அசாதாரணமான பிரகிருதி அல்ல என்பது எண்பிக்கப்பட்டு விட்டதே!

போரின் கடைசி நாளன்று... போரில் பலத்த காயம் பெற்று அதனைத் தேற்றிக் கொள்ள குளத்து நீரில் துரியோதனன் அமிழ்ந்திருந்த போது அவனைப் போரிட அழைத்தவன் தர்மன். மனதளவில் தளர்ச்சியுற்றிருந்த அவன், “எதற்காக நான் போரிட வேண்டும்? அனைவரையும் இழந்துவிட்டேன். சிறந்த மனிதர்களும் வீரர்களும் மறைந்துவிட்ட நிலையில் விதவைபோல ஆகிவிட்டது நாடு. இது எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கொள்.’’ என்றான். தர்மச் சக்ரவர்த்தி எனப்படும் தர்மன் அதனை ஏற்காமல் பீமனை உசுப்பிச் சண்டை போடச் செய்து துரியோதனனைச் சாகடித்துவிட்டான்.

அந்தச் சண்டையாவது தர்மப்படி நடந்ததா? துரியோதனனின் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பீமன் தாக்கிக் கொன்றானே. நேர்மையான போர் முறையா? “அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ’’ என்று வில்லிபுத்தூரான் பாடி சூதுப்போர் நாயகனான கிருஷ்ணனைச் சாடுகிறான்.

சூதாடி, பொய்யன் எனப் பெயர் வாங்கிய காரணத்தால் நரகத்தில் தள்ளப்பட்ட கீழானவன்தானே தர்மன்?

“பூமியில் கணக்கிறந்த பாவங்களைச் செய்தாலும் போர்முகத்தில் உறுதியாய்ச் சமமான வீரனுடன் சண்டையிட்டு இறப்பானேயானால் அவனுக்குச் சொர்க்கம் உரியது’’ என்பான் நாரதன். (மகாபாரத வசன காவியம் 4ஆம் பாகம், பக்கம் 518) அதன்படி சொர்க்கத்தில் இடம் பெற்றானே துரியோதனன். தர்மனா? துரியோதனனா? யாரை விரும்புவீர்கள்?

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.7.!8