பக்கங்கள்

ஞாயிறு, 16 ஜூன், 2024

இராமனைக் கொண்டாடும் மாநிலங்களிலேயே இராமாயண எதிர்ப்பு! பெரியாரின் பேரலை!

முகப்புக் கட்டுரை: 

2023 பிப்ரவரி 1-15, 2023 முகப்பு கட்டுரை

 மஞ்சை வசந்தன்

இராமாயணம் பற்றியும், இராமன் பற்றியும் தந்தை பெரியார் அவர்கள் நிறைய ஆய்வுகளைச் செய்து, இராமாயணம் மக்களுக்கு உகந்த நூல் அல்ல, நீதிநூலும் அல்ல. இராமன் ஒழுக்கம் உடையவன் அல்ல; நீதிநெறியில் நின்றவனும் அல்ல என்று ஏராளமான ஆதாரங்களோடு நூறாண்டுகளுக்கு முன்பே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்.
அதனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராமன், இராமாயணம் இரண்டும் செல்லுபடியாகாத சரக்குகள் ஆயின. ஆனால், வடமாநிலங்களில் இராமன் கடவுளாக வணங்கப்பட்டான். தொலைகாட்சியில் இராமாயணம் ஒளிபரப்பப்பட்டபின் இராம பக்தி வட மாநிலங்களில் பன்மடங்கு பெருகியது. இராமனுக்குக் கோயில் கட்ட ஆர்வம் காட்டினர். இராமனை முதலீடாக வைத்து பி.ஜே.பி. ஆட்சியையே பிடித்தது.
ஆனால், தற்போது அந்த வடமாநிலங்களில் பெரியார் பேரலை வீசத் தொடங்கிவிட்டது. அன்றைக்குப் பெரியார் எழுப்பிய கேள்விகளை இன்று வடமாநில அமைச்சர்களே எழுப்பி மக்கள் மத்தியில், விழிப்பை, எழுச்சியை உருவாக்கியுள்ளனர்.

பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகரின் ராமாயணம்குறித்த பேச்சு:

சில நாள்களுக்கு முன்னர், பீகார் மாநிலக் கல்வி அமைச்சரான சந்திரசேகர், ‘ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ராம்சரித்மானஸ் சமுதாயத்தில் வெறுப்புணர்வைப் பரப்புகிறது’’ என்று பேசியிருந்தார். அவர் தொடர்ந்து “16-ஆம் நூற்றாண்டில் ராமாயணத்தைத் தழுவி அவதி மொழியில் துளசிதாசர் எழுதிய இந்நூல் மக்களிடையே வெறுப்பையும் பிரிவினையுணர்வையும் விதைப்பதாக உள்ளது’’ என்றும் கூறினார்.

அமைச்சர் சந்திரசேகரின் கருத்து, மாநில பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சந்திரசேகரை எதிர்த்து பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி, கொடும்பாவி எரிப்பு நடத்தி, சந்திரசேகர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவர், “இந்து மதப் புனித நூல்கள் அனைத்தும் அபத்தங்கள்தாம். வெறுப்பையும் பிரிவினையையும் உண்டாக்குகிற கூற்றுகளையுடைய இந்த நூலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டியது பாஜகதான், நான் அல்ல’’ என்று அவர்களுக்குப் பதில் கூறியுள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியைத் தொடர்ந்து,

‘ராம்சரித்மானஸ்’ நூலைக் தடை செய்ய சமாஜ்வாதி கட்சித் தலைவர் கோரிக்கை
சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) சுவாமி பிரசாத் மவுர்யா, “மத நூலான ‘ராம்சரித்மானஸ்’ அர்த்தமில்லாத அபத்தங்கள் நிறைந்ததாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் ராம்சரித்-மானஸைப் படிப்பது இல்லை. அது முழுவதும் குப்பை தான்’’ என்று கூறியுள்ளது உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்,“ஆட்சேபணைக்குரிய பகுதிகளை ராம்சரித்மானஸ் நூலில் இருந்து அரசு நீக்க வேண்டும் அல்லது அந்த நூலையே தடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட மத நூலானது சூத்திரர்களை கீழ்ஜாதி என்கின்றது. துளசிதாசர் அந்த நூலை தற்புகழ்ச்சிக்காகவும் உல்லாசத்திற்காகவும் தான் எழுதினார் என்றும்,மதம் எதுவானாலும் அதை நாம் மதிக்கிறோம். ஆனால் (ராம்சரித்மானசில்) ஒரு மதத்தின் பெயரால் ஒரு குறிப்பிட்ட ஜாதி மற்றும் வகுப்பினரை அவமதிப்பது நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஜாதியைக் குறிப்பிட்டு அவதூறு செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் அதை ஆட்சேபிக்கிறோம். துளசிதாசரின் ராம்சரித்மானசில் ஆட்சேபிக்கப்படுகிற சில பகுதிகள் உள்ளன. எந்த மதத்தைச் சேர்ந்த எவரையும் அவதூறு செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. துளசி பாபாவின் ராமாயணத்தில் சூத்திரர்கள் கீழ்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாடுகள் சான்றளிக்கின்றன’’ என்றும் கூறினார்.இவர்கள் இருவரும் கூறியவை மிகக் குறைவு. இராமனின் இழிவுகள் ஏராளம் ஏராளம். சான்றாகச் சில:

வாலியை மறைந்து நின்று கொன்ற இராமன்

அரசனாகிய வாலி செய்த குற்றங்கள் என்று சிலவற்றை அனுமன் சொன்னதைக் கேட்டவுடன் இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? “நன்று அனும! வாலியைப் பற்றி நீ சொன்ன குற்றச் செயல்கள் குறித்து நானே வாலியை நேரில் கண்டு பேசுவேன்; அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்டு அறிந்தபின் குற்றம் எவர் பக்கம் என்பதை முடிவு செய்து அறத்தை நிலை நாட்டுவேன்’’ என்று இராமன் கூறியிருக்க வேண்டுமல்லவா? அல்லது “வாலியிடம் தம்பி இலக்குவனைத் தூதாக அனுப்பி வாலியின் பதில் அறிந்து வரச் செய்வேன்’’ என்றாவது சொல்லியிருக்க வேண்டும்? அவ்வாறு செய்திருந்தால் இராமனை அறத்தின் நாயகன் என்று கூறுவதில் பொருளுண்டு.

தன் மனைவியைக் கள்ளமாகக் கவர்ந்து சென்று சிறை வைத்த இராவணனிடமே அங்கதனைத் தூதாக அனுப்பி அந்த இராவணன் கருத்தை அறிந்து வருமாறு ஏவிய இராமனுக்குக் கிட்கிந்தை மன்னன் வாலிக்கும் தூது அனுப்பி அவன் கருத்தையும் அறிந்த பின்னரே ஒரு முடிவுக்கு வராமல் போனது சரியா? ஒரு தரப்பு செய்தியைக் கேட்டு செயல்பட்டதுதான் அறமா?

குற்றங்களின் கொள்கலம் இராமன்

அயோத்தியில் தம்பி பரதனுக்குரிய அரசை அவன் அறியாமல் தந்தை தசரதன் துணையுடன் கைப்பற்றிக் கொள்ளத் திட்டமிட்டவன் தான் இந்த இராமன். துணையின்றித் தனியே தன் எதிரில் வந்த தாடகை என்ற பெண்ணரசியை நாணேற்றிக் கொன்றவன் இந்த இராமன். தனித்து நின்ற இராவணன் தங்கை சூர்ப்பநகையிடம் முறை கேடாக நடந்து கொண்டதுடன் தம்பி இலக்குவனை ஏவி அந்தப் பெண்ணின் உறுப்புகளை அறுக்கச் செய்தவன் இந்த இராமன்.

இராமனின் சுயநலம்

வாலியைக் கொன்று சுக்ரீவனைக் கிட்கிந்தை அரசனாக்கினால் மட்டுமே வானரப் படையின் துணை கிடைக்கும்; அந்தப் படையின் துணையுடன் இராவணனை எதிர்த்துப் போரிட்டுச் சீதையை மீட்க முடியும் என்று தன்னலத்துடன் திட்டமிட்டுச் செயல்பட்ட இராமன் நேர்மையும், ஆன்றோர் போற்றும் அறப் பண்பும் இல்லாதவன்.வாலி, சுக்ரீவன் ஆகிய இருவருள் குற்றம் யார் பக்கம் இருந்தால் என்ன? எனக்கு என் மனைவி சீதை வேண்டும்; அவளை மீட்பதற்காக எவனையும் கொல்லத் தயார்… நியாயமாவது… அநியாயமாவது! என்று செயல்பட்ட இராமன் நீதிமானா?
ஈரேழு பதினான்கு உலகங்களும் வாலிக்கு உதவியாக வந்தாலும் என்னுடைய வில்லில் நாணேற்றி அவனை வீழ்த்துவேன் என்று கூறிய இராமன், களத்தில் வாலியின் எதிரே செல்லாமல் மரத்தின் பின்னே மறைந்து நின்று அம்பு தொடுத்து மாவீரன் வாலியை வீழ்த்தியது ஏன்? அது வீரமா? தர்மமா? மோசடியல்லவா?
‘‘காரணம் ஏதும் இல்லாமல் என்னைக் கொல்ல நீ முயன்றது சரி என்றால், இலங்கை வேந்தன் சீதையைக் கவர்ந்து சென்றது தவறு என்று நீ எப்படிச் சொல்ல முடியும்?

இருவர் போர் செய்யும் போது, அந்த இருவரில் ஒருவனுக்காக இள்னொருவன்மீது அம்பு தொடுத்தல் அறமோ?
நீ வாலியை வீழ்த்தவில்லை; மன்னவர்கள் போற்ற வேண்டிய அறம் ஆகிய வேலியை வீழ்த்திவிட்டாய்.
நேராக வராமல் மறைந்து நின்று நிராயுதபாணியாக நின்ற என்மீது அன்பு எய்தனையே! அது நீதியோ?’’
இவ்வாறெல்லாம் இராமனைப் பார்த்து வாலி கேட்டான். எல்லாம் கேட்டு முடித்தபின்னர், இராமன் வாலிக்குச் சொன்ன பதில் என்ன?
“நீ உன் தம்பியைக் கொல்ல முயன்றாய்; தம்பி மனைவி உருமையைக் கவர்ந்து கொண்டாய்; அது மட்டுமல்ல; சுக்ரீவன் எனக்கு ஆருயிர் நண்பன்; அதனால் உன்னைக் கொல்லத் துணிந்தேன்’’ என்றான் இராமன்.

இராமனின் பித்தலாட்டம்!

இராமன் வாலியின்மீது அம்பு தொடுப்பதற்கு ஆயத்தமாக நின்றபோது இலக்குவன் சொன்னான்: “அண்ணனைக் கொல்வதற்காகத் தம்பி உன்னை அழைத்து வந்திருக்கிறான்; அந்தத் தம்பியின் அழைப்பை ஏற்று அண்ணன் மேல் அம்பு தொடுப்பது அறமோ?’’ என்று கேட்ட இலக்குவனுக்கு இராமன் சொன்னபதில் என்ன?
‘‘வாலியும் சுக்ரீவனும் அறிவில்லாத விலங்குகள் _ குரங்குகள்! அவர்களுக்குள் அண்ணனாவது தம்பியாவது _ அறமாவது! இவ்வாறு, வாலியை விலங்கு _ மிருகம் _ குரங்கு என்று பேசிய இராமன், வாலியிடம் தம்பியின் மனைவியைத் தாரமாக்கிக் கொள்ளலாமா?’’ என்று கேட்டான்.
இப்படிக் கேட்டபோது, வாலியைக் குரங்கு என்று ஏன் ராமன் நினைக்கவில்லை! நினைக்காதது மட்டுமல்ல, வாலியே, ‘குரங்காகிய என்னிடம் மனித ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாமா?’ என்று இராமனைக் கேட்ட போது, நல்ல நெறிகளையெல்லாம் அறிந்தவனாக நீ இருத்தலால் நீ விலங்கு அல்ல என்று அறிந்தேன். அதனால் உன்மீது அம்பு தொடுத்தேன் என்றான் இராமன்! இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய முரண்பாட்டின் மொத்த வடிவம்தான் இராமன்.
கடைசியாக வாலி இராமனை நோக்கி ஒரு கேள்வி கேட்டான்: “மறைந்து நின்று ஏன் அம்பு தொடுத்தாய்?’’ என்பது அக்கேள்வி. பதில் சொல்ல வேண்டிய இராமன் பதில் சொல்லாமல் நின்றதால் அருகில் நின்ற இலக்குவன் சொன்னான்:

“உனக்கு முன்பாக உன் தம்பி வந்து சரண் புகுந்தான். உன்னைக் கொல்வதாக அவனுக்கு அண்ணன் வாக்களித்துவிட்டான். அதன் பிறகு, உன்னைக் கொல்வதற்காக அண்ணன் இராமன் நேரில் வந்தால், நீயும் உயிருக்குப் பயந்து அண்ணனிடம் அடைக்கலம் கேட்டால், உன் தம்பி சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாதே என்பதற்காகவே அண்ணன் இராமன் மறைந்து நின்று அம்பு தொடுத்தான்’’ என்று இலக்குவன் சொன்னான்.
‘அண்ணன் செய்தது அறம் அல்ல’ என்பதை இலக்குவன் அறிந்திருந்தாலும் அண்ணனை விட்டுக்கொடுக்க முடியாமல் இலக்குவன் முட்டுக் கொடுத்தான். இது ஏற்புடைய காரணம் அல்ல.
சம்பூகனைக் கொன்றது ஏன்?

அவன் சூத்திரன்; சூத்திரன் வேதம் ஓதக் கூடாது  வேள்வி இயற்றக் கூடாது; தவம் செய்யக்கூடாது என்ற சாத்திர விதிகளை மீறி அவன் தவம் செய்தான். அந்தச் சம்பூகனைக் கொல்ல அதுவே காரணம் எனச் சொல்லப்படுகிறது.
5000 வயதுள்ள இறந்துபோன தன் குழந்தையுடன் பார்ப்பனன் ஒருவன்; இராமன் அவனுடைய கடமையில் தவறியிருக்க வேண்டும்; இராமன் அல்லது ஏதோ பாவம் செய்திருக்கவேண்டும். அதனால்தான் 100,000 ஆண்டுகள் வாழவேண்டிய தன்னுடைய குழந்தை இளம் வயதிலேயே_ 5000 வயதிலேயே இறந்துவிட்டது என்று அந்தப் பார்ப்பனன் இராமனைக் குற்றம்சாட்டுகிறான்.

அதனைக் கேட்டு மனம் குழம்பிய இராமன், அருகிலிருந்த ரிஷிகளிடம் அதுபற்றிக் கேட்கிறான். பொய்யைச் சொல்வதிலும், பரப்புவதிலும் முதலிடம் பெற்றவர்களான தேவரிஷி நாரதரும், பிரம்மரிஷி அகஸ்தியரும் இராமனிடம் சொன்னார்கள்:
“விந்திய மலைச்சாரலில் சம்பூகன் என்ற ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருக்கிறான். அது, மன்னிக்க முடியாததும், மரண தண்டனைக்கு உரியதும் ஆகிய பாவச் செயல் ஆகும்.’’ இவ்வாறு ரிஷிகள் சொன்னதைக் கேட்ட இராமன், அறிவில்லாதவனாக, ரிஷிகள் சொன்னதை அப்படியே நம்பினான். புஷ்பக விமானத்தை வரவழைத்து சம்பூகன் இருக்குமிடம் சென்றான்; சம்பூகன் தலையைத் துண்டித்தான்; பார்ப்பனரைப் பாதுகாப்பதாகிய தர்மத்தை வெற்றிகரமாக முடித்தான்! செத்துப்போன பார்ப்பனப் பிள்ளை பிழைத்துக்கொண்டது.’’

இந்தக் கதை வால்மீகி இராமாயணம், உத்தரகாண்டத்தின் 73ஆவது சருக்கத்தில் சொல்லப்படுகிறது.
சூத்திரன் தவம் செய்யக்கூடாது; அது மாபெரும் குற்றம்; மரண தண்டனைக்குரிய குற்றம். சூத்திரன் ஒருவன் தவம் செய்ததால் பார்ப்பனச் சிறுவன் ஒருவன் செத்தான்; சூத்திரன் தலை துண்டிக்கப்பட்டவுடன் செத்துப்போன பார்ப்பனச் சிறுவன் பிழைத்துக் கொண்டானாம்! பார்ப்பனர் நலனைப் பேணுவதற்காக இராமன் சூத்திரர்களைக் கொலை செய்யத் தயங்கமாட்டான் என்பதை இக்கதை தெளிவாகக் காட்டுகிறது.
“திருமால், சிவன், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளை விடவும், அய்ம்பெரும் பூதங்களை விடவும், சத்தியத்தை விடவும் பார்ப்பனர் பெரியவர்கள்; அதனால் மனதார அவர்களைப் பேண வேண்டும்’’ -இராமன் எண்ணினான்.
இராமன் மட்டுமல்ல; அவனது குலமே பார்ப்பன தர்மத்தைப் பாதுகாப்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. இட்சுவாகு வமிசத்தில் வந்தவன் இராமன்; ரகு என்பவன் இராமனது குலத்தின் முன்னோர்களில் ஒருவன். பார்ப்பனன் ஒருவன் குபேரனால் தனக்குத் துன்பம் நேர்ந்ததாக ரகுவிடம் முறையிட்டானாம். அந்தப் பார்ப்பனனது குறையைப் போக்குவதற்காக ‘ரகு’ _ குபேரனிடம் போரிட்டானாம். அவனைப் போலவே இராமனும் பார்ப்பான் ஒருவனுக்காகச் சூத்திரன் சம்பூகன் தலையை அநியாயமாகத் துண்டித்துவிட்டான். ரகுவின் வழியில் வந்தவனல்லவா? அதனால் இராமனும் அதே அநியாயத்தைச் செய்கிறான்.

கைகேயிக்குச் செய்த துரோகம்

இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சமாக இருந்து வந்திருக்கிறான்.
கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும், மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு “கைகேயி தீய குணமுடையவள்’’ என்கிறான்! (அயோத்தியா காண்டம், 31, 33 ஆவது சருக்கம்).
சீதையைச் சந்தேகித்த இராமன்
மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச்செய்து, அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப்போட்டு, அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும். அதற்கு ஆக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான். இச்செய்தி உத்தரகாண்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பரதனுக்குத் துரோகம் செய்த இராமன்

அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என்பதும், இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதும், இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.
எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், “அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக’’ என்று கைகேயின் தந்தைக்கு வாக்களித்து, அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.
இந்த உண்மை இராமனுக்குத் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறான்.
ஆகவே, பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவன் தாய், ரிஷி, குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தையாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள். அதை இராமனும் ஏற்று பரதனுக்குத் துரோகம் செய்தான்.

மனைவிமீது அன்பில்லாத இராமன்
“நான் அயோத்தியில் இருக்கும்போது இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் இங்கு சரியான இடத்தில் அதாவது எப்பொழுதும் கூடி இன்பம் அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில். நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே’’ என்ற கருத்தில் துக்கப்படுகிறான். ஆகவே, இராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கிச் சென்றிருந்தால் இராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது!
“இராவணன் உன்னைத் தொட்டு மடியில் வைத்துக்கொண்டு போனான்: ஆசை பொழியும் நேத்திரங்களால் உன்னைப் பார்த்தான்.’’
உன்னை ஏற்றால், பார்ப்போர் சீ! சீ! என்று நிந்திப்பார்!
“களங்கமற்ற இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனென்று பெயர் வைத்துக்கொண்டு உன்னை இப்போது சேர்த்துக்கொண்டால், ஒவ்வொரு பிராணியும் சீ! சீ! என்று நிந்திக்காதா?’’
உன் மீது பிரியமில்லை, எங்காவது போய்விடு!
“என் குலதர்மத்தையும், கவுரவத்தையும் காப்பாற்ற உன்னைச் சத்துருவிடத்திலிருந்து மீட்டேன்: விசேஷ கீர்த்தியைச் சம்பாதித்தேன்: உன்னிடத்தில் எள்ளளவும் எனக்கு ஆசை இல்லை: நீ இஷ்டமான இடத்திற்குப் போகலாம்.’’

இது ஆலோசித்து செய்த முடிவு!
“நான் கோபத்தால் பதறிச் சொல்லவில்லை; இது சாந்தமாய் நெடுநேரம் ஆலோசித்தும் செய்த முடிவு.’’ என்று சீதையை வெறுத்தவன் இராமன். இறுதியில் இராமன் சரயு ஆற்றில் வீழ்ந்து உயிர்விட்டான் என்று உத்தரகாண்டம் நிறை-வு பெறுகிறது.
இப்படிப்பட்ட இராமனை அறத்தின் நாயகன், கடவுள் அவதாரம் என்று கொண்டாடுவது ஏற்புடையதா என்று இந்தியர்கள் அனைவரும் சிந்திக்கவேண்டும். இராமனைக் காட்டி வாக்குகளைப் பெற்று இந்துராஷ்டிரம் அமைக்கத் துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் சதியை முறியடிக்க, இராமனின் அற்பத்தனங்களை மக்கள் மத்தியில் விளக்கவேண்டும். ஆம். பெரியார் ஒளி இந்தியா முழுவதும் பரவவேண்டும். பாசிசம் வீழ்த்தப்படவும், மக்களாட்சி காப்பாற்றபடவும் அதுவொன்றே வழி!


சனி, 15 ஜூன், 2024

பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துகள் கொண்டதே இராமாயணம் – தந்தை பெரியார்


பெரியார் பேசுகிறார்! 

நானும் என்னுடைய கழகமும் கடந்த முப்பது ஆண்டுகளாக திராவிட மக்களின் நன்மைக்கெனவே பாடு
பட்டு வருகிறோம். நான் எதையும் எடுத்துக் கூறுகிறபொழுது பிறருடைய சலுகையை எதிர்பார்த்தோ, புகழை எதிர்பார்த்தோ கூறுவதில்லை. என்னுடைய மனதிற்கு நன்மை என்று தோன்றுகிற உண்மைகள் வேறு யாருக்கும் துன்பத்தை உண்டாக்குவதாகவோ, மனத்துயரை விளைவிக்கக் கூடியதாகவோ இருந்தாலும் நான் அவற்றை எல்லாம் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில், நான் அவர்களுடைய தயவை எதிர்பார்ப்பவனல்ல. அவர்களிடம் நான் நல்லவன் என்றோ அவர்களுக்கு நல்ல பிள்ளை என்றோ பெயரெடுத்து அதனால் எந்தப் பதவிக்கும், உத்தியோகத்திற்கும் போக வேண்டிய எண்ணம் எனக்குக் கிடையாது. இன்னமும் கூற வேண்டுமானால், நான் மற்றவர்களிடமிருந்து புகழ் வார்த்தைகள் கூட விரும்பவில்லை. ஆனால், இவ்வித முறையில் மற்ற கட்சிக்காரர்கள் இல்லாததால்தான் அவர்கள் உண்மையை எடுத்துக் கூற முடியாத நிலையில் உள்ளனர். அப்படி என்னைப் போல் அவர்களும் எந்த உண்மையையும் எடுத்துக் கூறினால், அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது. பார்ப்பனரை ஒழிக்க வேண்டும். சாஸ்திர புராணத்தை எரிக்க வேண்டுமென்று கூறிக் கொண்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டால் ஒருவராவது ஓட்டுப் போட மாட்டார்கள்.

ஆகவே, அவர்களிடம் ஓட்டுக் கேட்க வேண்டியதற்காகவாவது பார்ப்பனரை ஆதரித்தும், நான் செய்யும் கிளர்ச்சிக்கும், போராட்டங்களுக்கும் எதிராக சிலர் வேலைகள் செய்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்துதான் என்னுடைய கழகத்தின் பெயரைக் கூறிக் கொண்டு தேர்தலில் கலந்து கொள்வதில்லை என்றும், ஓட்டுப் பெற்று பாராளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் செல்வதில்லை என்றும் தீர்மானித்துள்ளோம். அப்படி இதுவரை சென்ற எந்தக் கட்சிக்காரர்களாவது நல்ல காரியத்தைச் சாதித்துள்ளனரா? என்பதைப் பார்க்கும் பொழுது, சென்றவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் முன்னேற்றத்திற்கென்று பணத்தையும், புகழையும், பெருமையையும் சம்பாதித்தார்களே தவிர, வேறு பொது மக்களுக்கென்று நன்மை ஒன்றும் செய்ததாகக் கூற முடியாது. தன்னுடைய வியாபாரத்துக்கும், கான்ட்ராக்ட் தொழிலுக்கும் லைசென்ஸ்_- பர்மிட் இவை வாங்கவும் மற்றும் பிறருக்கு வேண்டியவைகளைச் செய்கிறேன் என்று கூட அவர்களிடம் லஞ்சம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் வழிகள் இருக்கின்றதே தவிர, வேறு இவர்களால் எதையும் சாதிக்க முடியாத அளவில் அமைந்துள்ளது. அப்படி ஏதாவது ஓரிருவர் பெரிய காரியத்தைச் சாதித்தார்கள் என்றால் தங்கள் தங்கள் ஜாதிக்கு மட்டும் வேண்டிய ஓரிரு சலுகைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.

இப்படி இவர்கள் தங்கள் நலனுக்கென்று மக்களிடம் எதையும் மனம் கூசாது அன்பு வார்த்தைகளால் ஆசையைப் புகட்டி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கிறது. அவர்கள் கூறுவதுதான் உண்மை, அதை அப்படியே நம்பினால் உடனே பலன் கிட்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்.
இதைப் போன்றுதான் ஆதி முதற்கொண்டே தாங்கள் கூறியவைகளையே நம்ப வேண்டும், ஆராய்ந்து அறியக் கூடாது என்று கூறி, இதுவரை மூட நம்பிக்கையிலேயே ஆழ்த்தி விட்டனர். இன்னமும் ரிஷிகளும், தேவர்களும் கூறியதுதான் சாஸ்திரம், அவர்கள் எழுதியதுதான் புராணங்கள், அவர்களால் உண்டாக்கப்பட்டதுதான் மதம், இதை நம்பினால் தான் மோட்சம் கிடைக்கும், அறிவைக் கொண்டு ஆராய்ந்து எதிர்த்துக் கேட்டால் நரகம் சம்பவிக்கும்” என்று கூறி வந்துள்ளனர்.

ஆனால், நாங்கள் கூறுவதோ எதையும் கூறியவுடன் நம்பிவிடக் கூடாது. ஒவ்வொன்றையும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பதுதான் மனிதப் பண்புக்கு ஏற்றது. அதன்படி அறிவுக்கு ஏற்றவைகளின் படி நடக்கக் கோருகிறோம். இவ்விதமான நோக்கங்களைக் கொண்டதால்தான் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த மூட நம்பிக்கைகள் இன்று வெளியாகின்றன. பார்ப்பனர்களின் மதம், சாஸ்திரம், புராணம் இவற்றின் அர்த்தமற்ற கொள்கையும் அநாகரிகப் பழக்க வழக்கங்களும் அம்பலமாகின்றன.

பொதுவாக இராமாயணத்தைப் பற்றி எடுத்துக் கொண்டால் இதுவரை மக்கள் உண்மையாகவே அதை நடந்த கதை யென்றும், கடவுள் அவதாரம் எடுத்த சரித்திரம் என்றும் நம்பி வந்துள்ளனர். ஆனால், அது எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் – அதில் குறித்துள்ளவற்றைக் கொண்டே பார்த்தால் – முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளது.

இராமாயணம் சுமார் 13 லட்ச ஆண்டுகள் கொண்ட திரேதாயுகத்தில் நடந்த கதை என்று கூறப்படுகிறது. ஆனால், 13 லட்சம் ஆண்டுகள் கொண்ட அந்த யுகத்தில் 50 லட்சம் ஆண்டுகள் ஆயுளாகக் கொண்ட இராவணன் வசித்தான் என்று கூறப்படுகிறது. நான்கு யுகங்களையும் சேர்த்தால் கூட 50 லட்சம் ஆண்டுகள் கிடைக்காது. அப்படி இருக்க திரேதா யுகத்திற்கு மட்டும் 50 லட்சம் ஆண்டுகள் எங்கிருந்து வந்தது?

அடுத்து இராமாயணம் எழுதப்பட்டது திரேதாயுகத்தில். அதாவது, 25 லட்சம் ஆண்டு-களுக்கு முன் என்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த இராமாயணத்திலேயே 2,500 ஆண்டுகளுக்கு உட்பட்டு வசித்த புத்தரைப் பற்றிய விஷயங்கள் வருகின்றன. புத்த பிட்சுகளைப் பற்றியும், புத்த ஆலயம் என்ற சொல்லும் வருகின்றன. பாண்டிய அரசர்களைப் பற்றியும், சோழ நாட்டினைப் பற்றியும் வருகின்றன. இப்படி 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் 2,500 ஆண்டுக்குட்பட்ட விஷயங்கள் வருவதற்கு என்ன பொருத்தமுள்ளது? ஆகவே, இந்நூல் பார்ப்பனர்கள் இந்நாட்டிற்கு வந்த பிறகுதான் இதை எழுதியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதன்றியும், இக்கதையை ஒருவன் தன் சொந்த மூளையைக் கொண்டு கற்பனை செய்து எழுதப்பட்டதுமல்ல, இப்பொழுது ஒருவர் சினிமாக் கதையை மற்றவர் காப்பியடித்து எழுதி விட்டனர் என்று சண்டை போட்டுக் கொள்வதைப் போல் அப்பொழுதும் வைஷ்ணவர் கதையை சைவர் காப்பி யடிப்பதும் சைவர்கள் கதையை வைஷ்ணவர்கள் காப்பியடித்து எழுதும் தொழிலில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். ஆகவே, கந்தபுராணம் என்ற சைவர்கள் கதையை வைஷ்ணவர்கள் காப்பியடித்து அதைத் தழுவியே இராமாயணத்தை எழுதி இருக்கின்றனர். கந்தபுராணம் முந்திய நூல் என்பதற்கும் இராமாயணம் பிந்திய நூல் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. கந்தபுராணத்தின் குறிப்புகள் இராமாயணத்தில் உள்ளன. இராமாயணத்தைப் பற்றி கந்தபுராணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
இவை, இரண்டிலும் ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக 50க்கு மேற்பட்ட விஷயங்கள் தென்படுகின்றன.

ஆரம்பம் முதற்கொண்டு கடைசி வரை, பிறப்பு முதற்கொண்டு கடைசி வரை, பிறப்பு முதற்கொண்டு இறப்பு
வரையிலும், அவற்றில் கூறப்பட்ட ஒப்பாரி முதற்கொண்டு ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக இருக்கிறது. இதை நன்றாக உணர வேண்டுமானால் ஆர்.பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘வேலும் வில்லும்’ என்ற ஆராய்ச்சி நூலில் தெளிவுறக் காணலாம்.
இப்படியாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் இதுபோன்ற அர்த்தமற்ற செய்திகளும், பொருத்தமற்ற விஷயங்களும் தென்படுவது மல்லாமல், இராமன் கடவுள் அல்ல; சீதை பத்தினி அல்ல; தசரதன் யோக்கியன் அல்ல; ரிஷிகள் காமப் பித்தர்கள், யாகங்கள் என்பன ஆரியரின் ஆபாச நாகரிகங்களை விளக்கும் சம்பவங்கள் என்பன போன்ற உண்மைகள் விளங்கும்.

(4.3.1955 அன்று விருதுநகர் பொதுக்கூட்டத்தில்
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)
‘விடுதலை’ 21.3.1955

புதன், 12 ஜூன், 2024

இராமரே தகர்த்தபின் இராமர் பாலம் ஏது?



 ஜனவரி 1-15, 2023

மஞ்சை வசந்தன்

இராமர் பாலம் இல்லை. அது வெறும் மணல் திட்டு. உலகில் பல இடங்களில் அப்படித் திட்டுகள் உள்ளன என்று அறிவியல் பூர்வமாய் எடுத்துச் சொல்லும்போது, இல்லை யில்லை, இது எங்கள் மத நம்பிக்கை _ எங்கள் புராணங்கள் கூறும் செய்திகளின்படி நம்பிக்கை _ அந்த நம்பிக்கைக்கு விரோதமாக அதை இடிக்கக்கூடாது என்று எதிர்வாதம் செய்வதோடு, இன்று உச்சநீதிமன்றம் வரை சென்று எங்கள் நம்பிக்கையின் சின்னமான இராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்.
ஆனால், உண்மை என்னவென்றால், புராணத்தையே படிக்காத அடி முட்டாள்கள், அரைவேக்காடுகள், ஆதிக்கப் பேர்வழிகள் பரப்பும் வதந்தியே இராமர் பாலம் என்பது. இராமர் பாலம் இல்லை என்பதை நாம் சொல்ல
வில்லை. அவர்களின் புராணமே சொல்கிறது.

இராமர் பாலத்தை, இராமரே தகர்த்தார்:-
சேது புராணம் செப்புவது என்ன?
இராமர் பாலம் அமைத்தது தொடர்பான கதையைச் சொல்வது சேது புராணம் என்ற பழைமைவாய்ந்த நூல் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அப்புராணத்தை தேடிக் கண்டு அதை ஆய்வு செய்தால் இவர்களின் மோசடியும், பித்தலாட்டமும் அப்பட்ட-மாக வெளிப்படுகிறது.
இராமர் சேது அணையைக் கட்டியதை கூறும் அப்புராணம், இராமர் தன் கையாலே, தனது வில்லினால் சேது அணையைத் தகர்த்து அழித்து விட்டார் என்ற செய்தியையும் அறிவிக்கிறது.
அதாவது, கடலுக்கு மேலே (நீருக்கு மேலே) மிதவைக்கல்லால் இராமர் பாலம் அமைத்தார் என்றும். இராவண வதம் முடிந்து, அப்பாலத்தைக் கடந்து மீண்டும் தனுஷ்கோடிப் பகுதிக்கு இராமர் கூட்டம் வந்த போது, விபீஷணன், இராமனைப் பார்த்து, இலங்கைக்குச் சென்று வர நீங்கள் அமைத்த இப்பாலத்தை இப்படியே விட்டுச் சென்றால், இலங்கையில் உள்ள கொடியவர்கள் இப்பாலத்தின் வழியே வந்து பல பகுதிகளுக்கும் சென்று அக்கிரமம், கொடுமை, அழிவு செய்வார்கள். எனவே, நீங்கள் அமைத்த இப்பாலத்தை நீங்களே தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமர் அவ்வாறே அப்பாலத்தைத் தகர்த்து அழித்து விட்டார் என்கிறது சேது புராணம்.

இராமர் பாலம் அமைத்ததையும், பின் அதை அவர் தகர்த்ததையும் கூறும் சேது புராணப் பகுதி இதோ:
மிதவை அணை கட்டியது எப்படி?
இலங்கைக்குப் போக வேண்டுமானால் வானராதிகளால் சமுத்திரத்திற்கு அணைகட்டி அப்பாலத்தில் நடந்துபோக வேண்டுமென்று சொல்ல, சுவாமியும் அந்த வார்த்தையை ஒப்புக் கொண்டு சமுத்திரமும் ஆழம் நீள மறிந்து அணையைக் கட்ட வருணனை நோக்கி ஏழுநாள் தர்ப்பாசனத்தில் வருண மந்திரத்தைத் தியானித்துக் கொண்டிருந்தார். அஃதறிந்து வருணணும் வராததுகண்டு க்ஷணத்தில் சுவாமிக்கு கோபம் வந்து பாணத்தைப் பிரயோகஞ்செய்தார். வருணனும் பயந்து சரணாகதியடைந்து தோத்திரமுஞ் செய்தான். சுவாமியுந்தயவுவந்து இச் சமுத்திரத்தின் ஆழமும் இலங்கைக்குப் போக நீளமென்னவென்று கேட்டு, அணை கட்ட வேண்டியதையுஞ் சொல்ல, வருணனுங்கேட்டு சுவாமி ஆழங்காணக்கூடாது அணை போட வேண்டுமானால் போட்டகல் மிதக்கும்படி வரப்பிரசாதங்களினால் பிறந்திருக்கின்றான், வானரப்படைத் தலைவரில் நளனென்று ஒருவன் சுவாமியுடன் வந்திருக்கின்றான்.

அவன் பூர்வஜன்மத்தில் மயனாகிய சிற்பனாக்கும். அவனுக்கு சுவாமியின் உத்தரவு கொடுத்து வானரப் படைகளால் ஒத்தாசை செய்தால் அவனும் கட்டு வானென்று சொல்ல, சுவாமியும் அவனை அழைத்துப் பரிசீந்து நீரிலே போட்டால் மிதக்கும்படி உன் பிதாவினுடைய வரப்பிரசாதம் பெற்றவனாகலின் அனுமார் முதலாகிய
வானரப்படை வீரர்களான வானர வீரர்கள் கொண்டு வந்து கொடுக்கின்ற பர்வதங்களை வாங்கி உன்கையினால் இலங்கைக்குப் போகும்படி வருணனுடைய முதுகின் பேரில் அணை கட்டென்று
ஸ்ரீ ராமசுவாமி வரப்பிரசாதங் கொடுத்தருளி, யாதொரு விக்கினங்களும் வராமல் நிறைவேற்றும்படிக்கு விக்கிநேஸ்வரனைப் பூசித்து அனுகிரகம் பெற்று அப்பால் நவக் கிரகங்களையும் விதிப்படி நவபாஷாண ஸ்தாபிதஞ்செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து அப்பால் சனிப்பீரிதியாய் எண்ணெயை வைத்து சிவப்பிரதிஷ்டை செய்து திலதீஸ்வரரை பூசித்து இவர்களுடைய அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு நளனுக்கு சேதுபந்தனத்துக் குத் தேங்காய் தொட்டுக் கொடுத்து அனுமார் முதலிய பெரியோர்களான படைத் தலைவரையும், வானரப் படைகளையும் நாலுதிக்குகளிலும் போய் பருவதங்களைக் கொண்டு வந்து கொடுக்கும்படி கட்டளை-யிட ஸ்ரீராமருடைய வாக்கியப்படி வானராதிகளெல்லாம் பருவதங்களை, சங்கை யில்லாமல் கொண்டுவந்து மேன்மேலும் கொடுக்க ஸ்ரீராமசுவாமியும், லக்ஷ்மணரும், ஜயம்ஜயமென்று வாக்குக் கொடுக்க நளனானவன் வாங்கிக் கட்டின திருவணை
யானது சேதுபந்தன முடிவாயிருக்கும்.

அப்படி ஸ்ரீராமசுவாமியாலே அநேக நதிகள், சுனைகள், ரிஷிகள், சஞ்சாரஞ்
செய்து கொண்டிருந்த பருவதங்களை ஸ்ரீராமர் வாக்கியத்தின்படி வானராதிகளால் கொண்டுவந்து கொடுக்க நளன் வாங்கி
அடைக்கின்றபோது சமுத்திரத்தை எப்போதுங் கண் பார்க்க வந்த ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி நடக்கும்போது பட்ட பாதாரவிந்தங்களிலுள்ள சங்கு சக்கரரேகைகள் சேதுவில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அத்தகைய பருவதங்கள் சங்கு சக்கரங்களில் அலைமோதிச் சத்தத்
துடன் ஆடம்பரஞ் செய்து கெர்ச்சிதங்களைப் பண்ணி தென் சமுத்திரமானது
மகா ஆனந்த சந்தோஷங்களை யடைந்து கொண்டிருக்கும்படி அலைமோதுகின்றன. சமுத்திர ஜலத்துக்கு சேது தீர்த்தமென்று பெயர் அநேகயுகங்களாய்ப் பிரகாசித்துக் கொண்டுள்ளது.

இராமர் பாலத்தைத் தகர்த்தது எப்படி?
மஹருஷிகளே கோதண்ட மென்னும் வில்லைக் கரத்திலேந்தி யிலகாநின்ற ஸ்ரீராம மூர்த்தியானவர் பத்து சிரங்களையும், இருபது கரங்களையுமுடைய இராவணனைச் சங்காரஞ் செய்து பண்ணுதற்கரிய தசக்ரீவனென்னும் ராவணனாலே தரிக்கப்பட்டிருந்த கிரீடத்தை, விபூஷணனுடைய சிரத்திற்தரித்து பட்டாபிஷேகஞ்செய்து இலங்கைக்கு அரசனாக்கிச் சமுத்திரத்திற் கட்டியிருக்குஞ் சேது மார்க்கத்தில் சீதாதேவியோடு தனது தம்பியாகிய இலட்சுமணன் அனுமான், சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் யாவரும் புடைசூழந்
திறைஞ்சப் புட்பக விமானத்திலேறிச் சந்திர சூரியரும் விலகிநிற்கும் படியாய் கருட காந்தர்வ சித்த வித்யாதரர்கள் போற்றச் சேதுவைக் கடந்து அந்த வாகனத்தி லிறங்கித் திருவிளையாடல் செய்ய வெண்ணியிருக்கையில் ஸ்ரீராமச்சந்திரனுடைய பாதபத்மங்களை விபீஷணனானவன் பணிந்து கூறுவான், ‘‘சுவாமீ! வேதவேதாந்த மூர்த்தியே!

தேவரீரிப்போது இராவணாதி ராட்சதர்களைக் கண்டிக்கும் பொருட்டு வானராதி வீரற்களாற் செய்யப்பட்ட இச்சேதுவை இவ்வாறேயிருக்கச்சயன்றால், இலங்கையில் உள்ள இராக்கதர்கள் யாவரும் இம்மார்க்கத்தில் எங்கும் போக்கு
வரவாயிருந்து உலகிலுள்ள ஜீவர்களை இம்சை செய்வார் களாதலால் இச்சேது வாகிய அணையை சோதிக்க (தகர்க்க) வேண்டுமென்று
சொல்ல, அப்போது ஸ்ரீராம மூர்த்தியானவர் அவ்வாய் மையைக் கேட்டு மெய்தானென்று சிந்தித்து மனக்களிப்பினோடு தனது கரத்தில் விளங்குங் கோதண்டமென்னும் வில்லினாலே
நல்ல சர்ப்பத்தை கருடன் தன் கால்நகங்-களினால் தாக்கிக் கிழித்ததுபோலவும் முன்னர் இலங்கையில் இந்திரசித்துவினால் விடப்பட்ட நாகபாசத்தை கருடபகவான் பொடி படச் செய்ததுபோலவும் கிழித்துச் சேதுவாகிய திருவணையை உடைத்துப் போட்டார்.
மேலே கண்ட புராணக் கதையிலிருந்து கீழ்க்கண்டவை உறுதி செய்யப்படுகின்றன.

1. இராமர் பாலம் கடலுக்குள் அமைக்கப்-பட்ட மணல் பாலம் அல்ல.
2. இராமர் பாலம் மிதவைக் கற்களால் கட்டப்பட்டது. கடல் நீரின் மேல் மிதக்கும்படி கட்டப்பட்டது. (வருணனின் முதுகின்மேல் என்
பதற்கு கடல் நீரின் மேல் என்பது
பொருள்).
3. இராவணனை அழிக்க இலங்கைக்குச் சென்று வர மட்டுமே மிதவைப் பாலம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் விபீஷணனின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை இராமர் ஏற்று, இராமர் பாலத்தை இராமரே தகர்த்து விட்டார். அதுவும் எப்படித் தகர்த்தார்? பாம்பை கீரியானது குதறி எறிவது போல்; இந்திரசித்து விட்ட நாகபாசத்தை, கருடன் சிதைத்ததைப் போல் இராமர் தன் கையாலே, தன் வில்லாலே தகர்த்தார்.
இந்த மூன்று செய்திகளும் உறுதி செய்யும் உண்மையென்ன?
1. தற்போது கடலுக்குள் உள்ள மணல்மேடு இராமர் பாலம் அல்ல. இராமர் பாலம், கடல் நீர் மீது மிதக்கும்படியான மிதவைக் கற்களால் அமைக்கப்பட்டது. எனவே இவர்கள் இராமர் பாலம் என்று கூறும் மணல் மேடு இராமர் பாலம் அல்ல. அது இயற்கையாய் உருவான மணல்திட்டு.
2. இராமர் கட்டிய பாலத்தை இராமரே தகர்த்து அழித்து விட்டார். எனவே இராமர் பாலமே இல்லை.
3. மத நம்பிக்கைக்கு அடிப்படை புராணம். புராணமே இராமர் பாலம் அப்போதே இராமனால் அழிக்கப்பட்டு விட்டது என்றுகூறி விட்டபின், இராமர் பாலம் இருப்பதாகக் கூறுவது மோசடியல்லவா? பித்தலாட்டமல்லவா?
சுப்பிரமணியசாமியும், மற்றுமுள்ள சங்கிகளும் பதில் சொல்லவேண்டும். உங்கள் புராணமே இராமர் பாலம் இல்லையென்று சொல்லவிட்டபின், எதை வைத்து இராமர் பாலம் இருப்பதாகச் சொல்கிறீர்கள்?
மத்திய அரசு, இந்த புராண ஆதாரத்தை அறிவியல் அறிக்கையை அடிப்படையாக வைத்து இராமர் பாலம் இல்லையென்று அறிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழர்கள் இதற்காகப் போராடவேண்டும். உண்மை நம் பக்கம். வெற்றி நமதே!


செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

இந்த இராமன்தான் கடவுளா? அம்பேத்கர் கேட்கிறார்!

சிந்தனைக் களம் : 

2022 ஆகஸ்ட் 01-15 2022 சிந்தனைக் களம்


அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்குத் தக்கது அல்ல எனலாம். இராமன் ஏக பத்தினி விரதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாத தாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடு-கிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல, வைப்-பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.

இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையைச் சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையைச் சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையி லேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியி லமர்த்திய பிறகும்கூட, சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமனைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிதான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்குச் சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனைச் சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு போய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.

சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?
மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) ‘உன்னைச் சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய, உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.’’

இராமன் சீதைக்கு, இதைவிடக் கொடுஞ்-செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது.
“ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்பு மில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.’’
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ற எண்ணத்தை -சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னைச் சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி, -அதன் அடிப்படையில் சீதையைக் கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது.- “நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே’’ -என்று சீதை வெளிப்படையாகச் சொல்கிறாள். இப்படிப்-பட்ட இராமனை அற்பத்தனமானவன் என்று சீதை இகழ்ந்திடுவது இயல்பே.

(அம்பேத்கர் எழுதிய, ‘இராமன் – கிருஷ்ணன் ஒரு புதிர்’ நூலிலிருந்து…)
தகவல்: திருவாரூர் கிருட்டினமூர்த்தி

திங்கள், 12 பிப்ரவரி, 2024

இராமன் எத்தகைய இராமனடி!


ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

சீதை மாமிசம் சாப்பிட்டது ‘துக்ளக்’குக்கு தெரியுமா?