பக்கங்கள்

வெள்ளி, 10 ஜூலை, 2015

சீதை தசரதனின் மகள்! 4,5 ஆதாரங்கள்! - தந்தை பெரியார்


இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டனவென்றும்,
 
ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமாயண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928ஆ-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புத்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புத்தகத்தின் விலை ரூ.1) அவையாவன:- ஜைன ராமாயணம், பவுத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் என்பவைகளாகும்.

இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இங்கு எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயீ, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதுபோலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டாளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சுமணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும்,  அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்குப் பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்று சொன்னதால், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப் பட்டிருக்கின்றது.
இவைகளை மெய்ப்பிக்க திரு. அய்யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10ஆ-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின்தென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதி யிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431ஆ-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் ஸ்கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கு ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவணனுக்கு உண்மையில் ராமன் தன் தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்கமாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ஆம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.
மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார்.
எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 - ஆதாரங்களும் ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற ராமாயணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக் கூடவில்லை.
- குடிஅரசு, கட்டுரை, 03.03.1929

-உண்மை,1.7.2015

சீதை இராமனுக்குத் தங்கை!

      
இராமாயணம் எத்தனை இராமாயணம்!
சீதை இராமனுக்குத் தங்கை!
இராமனுக்கு நான்கு மனைவி!
- மஞ்சை வசந்தன்

இராமன் சீதை இருவரும் ஒருதாய் பிள்ளை. அதாவது அண்ணன் தங்கை என்று பவுத்த இராமாயணத்திலும், பம்ப இராமாயணத்திலும், ஜைன இராமாயணத்திலும் எழுதப்பட்டுள்ளது!
இன்னுமொரு இராமாயணத்தில் சீதை இராவணனின் மகள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இராமன் பல பெண்டிரைத் திருமணம் செய்தான் என்று ஜைன இராமாயணம் சொல்கிறது. 1.சீதை, 2.பிரபாவதி, 3.ரதினிபா, 4.ஸ்ரீதாமா என்ற நால்வரும் இராமனின் மனைவியர் என்கிறது இந்த இராமாயணம்.
இலட்சுமணனுக்கு எட்டு மனைவி
இலட்சுமணனுக்கு எட்டு மனைவிகள் 250 பிள்ளைகள் என்கிறது ஜைன இராமாயணம். விசல்யா, ரூபவதி, வனமாலா, கல்யாண மாலிகா, ரத்தினமாலிகா, ஜீதபத்மா, பாக்கியவதி, மனோரமா என்ற எட்டு மனைவிகள் என்று விவரிக்கிறது.
ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸ அய்யங்கார்
இவர் 1.ஜைன இராமாயணம், 2.பௌத்த இராமாயணம், 3.யவன இராமாயணம், 4.கிறிஸ்துவ இராமாயணம் என்ற நான்கு இராமாயணங்களை ஆய்வு செய்து 1928இல் இதர இராமாயணங்கள் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.
இருபத்து நான்கு இராமாயணம்
நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் இறுதியில் 24 இராமாயணங்கள் நிலைக்கின்றன.
பவுத்தர்கள் பிராகிருத மொழியிலும், இந்துக்கள் வடமொழியிலும், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளிலும் இராமாயணம் எழுதியுள்ளனர்.
கி.பி.முதல் நூற்றாண்டில் விமலசூரி என்பவர் இராமாயணத்தை பவுமசகியம் என்ற பெயரில் எழுதினார்.

அதன்பிறகு சவுமியன், சுயம்புவன், குணபக்த ராச்சாரியன், ரவிசேனன், தேவச்சந்திரன், பிரவரசேனன் என்ற சமணர்கள் இராமாயணத்தை எழுதியுள்ளனர்.
பவுத்தர்கள் தசரத ஜாதகம், சாம ஜாதகக் கதை, செச்ந்திர ஜாதகம், சம்புல ஜாதகம், இலங்காவதார சூத்திரம் என்ற இராமாயண கதைகளை எழுதியுள்ளனர்.
7ஆம் நூற்றாண்டில் ரவிசேனன் மகாராமாயணம் எழுதினார். கி.பி.12ஆம் நூற்றாண்டில் திரிசஷ்டிகாலக்கா என்ற பெயரில் இராம கதையை எழுதினார்.
கி.பி.16ஆம் நூற்றாண்டில் தேவ விஜயர் இராம சரிதம் எழுதினார்.
இராமாயணம் என்பது கற்பனைக் கதை. உண்மை நடப்பாயிருந்தால் ஒரே மாதிரி இருக்கும். கற்பனை என்பதால் கண்டபடியிருக்கிறது! பலவிதமாக இருப்பதே பொய் என்பதற்கான ஆதாரம்.
தந்தை பெரியாரின் இராமாயண ஆய்வு
தந்தை பெரியார் அவர்கள் இராமாயணக் குறிப்புகள், இராமாயண பாத்திரங்கள் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்கள். இவை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட இராமாயணத்தைத்தான் இந்தியா முழுக்கப் பரப்பி மதவெறியைத் தூண்டப் பார்க்கிறது மதவெறிக் கூட்டம்.
இந்த இராமனைத்தான் இந்தியாவின் ஏகக் கடவுளாக ஆக்கப் பார்க்கிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும்கூட அதை ஏற்க வேண்டும் என்கின்றனர்.
வடநாட்டில் தடம் பதிக்கும் பெரியார்
அறிவியலின் உச்சத்தில் உலகம் சென்று கொண்டிருக்கையில் நாட்டை 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துத் தங்களின் மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம்.
இச்சூழலில் தந்தை பெரியாரின் தேவை வடபுலத்தாரால் உணரப்பட்டு பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்படுகிறது.
வடநாட்டு பத்திரிகைகள் தந்தை பெரியாரின் தேவையை வலியுறுத்தி எழுதுகின்றன. ஆரிய ஆதிக்கம் வீழ்த்தப்பட, மதச்சார்பற்ற நெறி பின்பற்றப்பட தந்தை பெரியாரின் கொள்கைகள் முதற்கட்டமாக  இந்திய மயமாக்க வேண்டியது இன்றியமையாக் கடமையாகும்.

-உண்மை இதழ், 1.7.2015

வெள்ளி, 19 ஜூன், 2015

இராமாயண ஆராய்ச்சி - வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்

இராமாயண ஆராய்ச்சி
வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்
இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;
இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.
நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.
இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

விடுதலை19.6.15

சனி, 7 மார்ச், 2015

இராமாயணம் நடந்த கதையா? இராமன் யோக்கியமானவன் தானா?

வியாழன், 1 நவம்பர், 2012

இராமாயணம் நடந்த கதையா? இராமன் யோக்கியமானவன் தானா?



மதுரை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் தொடுத்த வினாக்கள்


மதுரை, நவ. 1- சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கி ராமனை இழுத்து வந்து முட்டுக்கட்டை போடுகிறார்களே, அந்த ராமன் இராமாயணக் கதைப்படியே பார்த்தாலும் யோக்கியனா - பின் பற்றத் தகுந்தவனா என்ற வினாக்களை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

எது தேவை? இராமனா? சேது சமுத்திரத் திட்டமா? என்ற தலைப்பில் மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் 26.10.2012, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:

எந்த மதுரையிலே இந்தத் திட்டம் தொடங்கப் பெற்றதோ, அதே மதுரையிலே மீண்டும் அது முடிந்திடவேண்டும்; நிறுத்தப்படக் கூடாது என்பதை வலியுறுத்தக் கூடிய முதல் கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது; பணி தொடங்கிவிட்டது.

இதிலே கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை. அதேநேரத்தில், தெளிவு உண்டு, முன் னேற்றப் பாதையிலே ஆர்வம் உண்டு. வளர்ச்சியிலே அக்கறை உண்டு என்ற கருத்தோடு இங்கே நாம் கூடியிருக்கின்றோம்.
இந்த மேடையைப் பார்க்கும்பொழுதே, பல பேருக்கு வியப்பாக இருக்கும்.  இவர்கள் எல்லோ ரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்களே, மற்ற நேரங்களில் எப்படி இருப்பார்களோ என்று.

கொள்கையின் அடிப்படையிலே உருவாகிய கூட்டணி

இதுவே ஒரு நல்ல அற்புதமான தொடக்கம் ஆகும். ஏனென்றால், கொள்கைகளின் அடிப்படை யிலே கூட்டணிகள் உருவாகவேண்டும்.  அந்தக் கொள்கையின் அடிப்படையிலே உருவாகிய கூட்டணிதான் இங்கே அமர்ந்திருப்பது.

திராவிடர் கழகம் எந்தக் கூட்டணியில் இல்லா விட்டாலும், இந்தக் கூட்டணியில் இருக்கும். ஏனென்றால், இது ஒரு லட்சியக் கூட்டணி. ஒரு லட்சியத்தை முன்னாலே நிறுத்தி, அந்த லட்சியம் பொதுமக்களுக்கு, பெரும்பாலான மக்களுக்கு, அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒன்று.
அதை மூட நம்பிக்கையைக் காட்டி அதைத் தகர்க்கவிடக் கூடாது. மதவெறியை உண்டாக்கி இந்த நாட்டில் மீண்டும் மனிதநேயத்தைக் கொல்லக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்குத்தான் இந்தக் கூட்டம். அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எந்தவிதமான அய்யமும் இல்லை

எங்கள் மத்தியிலே யாருக்கு எத்தனை சீட்டு என்ற பிரச்சினையெல்லாம் கிடையாது. அதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இந்தக் கூட்டணியிலே பங்கீட்டுப் பிரச்சினையெல்லாம் வராது. ஏனென்றால், முழுக்க முழுக்க ஓர் இலக்கோடு இருக்கக் கூடியவர்கள் நாங்கள். அருமை சகோதரர் ஜான்மோசஸ் அவர்கள் எனக்கு சொன்னார்கள், நீங்கள் ஒரு நடை பய ணத்தைத் தொடங்குங்கள் என்று சொன்னார்கள்.

நடை பயணம் என்பது ரொம்பப் பழசு. இப் பொழுதெல்லாம் நீண்ட தூரம் நடந்து போய் இந்தப் பிரச்சாரத்தை செய்யவேண்டிய அவசியம் இல்லை. இது ராக்கெட் காலம். செவ்வாய் மண்டலத்துக்கே மனிதன் போய் குடியேறக் கூடிய காலம் இது. நம்மாள் என்னவென்றால், செவ்வாய் தோஷத்தைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருக்கிறான்.

மீத்தேன் வாயு அங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கே இடம் இல்லை என்று, செவ்வாய் கிரகத்தில் இடத்தைத் தேடுகிற கால கட்டம் இது.

தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்

இந்தக் காலகட்டத்தில் இராமனைக் காட்டி ஒரு திட்டத்தை நிறுத்தலாம் என்று சொன்னால், அது ஆரியத்தினுடைய ஒரு புதிய அவதாரம் மட்டுமல்ல, அரசியலிலே ஒரு புதிய வியூகமும்கூட. அரசியல் கட்சிக்காரர்கள் தெளிவாகத் தெரிந்து கொள் ளுங்கள்.

இன்னொரு கட்சிக்கு, இன்னொரு அணிக்கு மரியாதை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொடங்கப் பெற்றது. ஏற்கெனவே ஆதரித்தார்களே என்று சொன்னால், அந்தக் கட்சி செய்யாது என்று நினைத்துத்தான்.

நான் ஆதாரத்தோடு எதையும்  சொல்லக் கூடியவன் என்ற முறையில் சொல்கிறேன். சுருக்கமாகவும் உங்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும் என்றால், தந்தை பெரியார் ஒரு கேள்வி கேட்டார்: நல்ல தலைப்பு போட்டார்கள். ராமனா? சேது திட்டமா? என்று.

இராமாயணப் பாத்திரங்கள்

இல்லாத ராமன், பொல்லாத ராமன்கூட, இந்தக் கற்பனைப் பாத்திரம் என்று சொல்லும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள், பல லட்சக் கணக்கிலே விற்றிருக்கின்ற ஒரு புத்தகம்.

எப்பொழுது என்றால், 60, 70, 80 ஆண்டுகளுக்கு முன்னாலே - இராமாயணப் பாத்திரங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் ஆய்வு செய்து, அய்யா அவர்கள் படிக்காத ராமாயணமே கிடையாது. அப்படி ஆய்வு செய்து எழுதிய இந்த இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலில் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்.

அதிலே, ராமாயணம் நடந்த கதை அல்ல என்று ரொம்பத் தெளிவாக எழுதிவிட்டு, ஒரு கேள்வி கேட்கிறார்.

ராமாயணம் நடந்த கதை அல்ல. அதன் காலமே சுத்தப் புரட்டு. ராமன் என்கிறவன் கற்பனைப் பாத்திரம்தான் என்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் ஆதாரம் சொல்கிறார்.

ராமாயணம் திரேதாயுகத்தில் நடந்த கதை. திரேதாயுகத்திற்கு உண்டான வருஷம் 12 லட்சத்து 96 ஆயிரம்தான். ஆனால், அந்த யுகத்தில் ராவணன் 50 லட்சம் வருடங்கள் ஆண்டு இருக்கிறான் என்பது ராமாயணக் கதையின்படி உள்ள செய்தியாகும்.

அய்யா அவர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, நாளைக்கு ஒரு பத்திரிகைக் காரன் எழுதுகிறார்; பல லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர், பேசும் நான். கூட்டம் 7 மணிக்குத் தொடங்கி, 10 மணிக்கு முடிந்தது. அதில் இராமசாமி எவ்வளவு நேரம் பேசினார் என்றால், 6 மணிநேரம் பேசினார்.

கூட்டம் நடந்தது மூன்று மணிநேரம்; அந்த நேரத்தில் இவ்வளவு பேர் பேசியிருக்கிறார்கள். இராமசாமி மட்டுமே 6 மணிநேரம் பேசினார் என்றால், அதைவிட பெரிய புளுகு, ஏமாற்று வேலை வேறு எதுவாக இருக்கும்?

எனவே, இல்லாத ஒரு ராமனை (கற்பனைப் பாத்திரம்) மற்றவர்கள் பார்த்து பின்பற்றக்கூடிய அளவிற்கு உண்டா?

ராமன் ரொம்பப் புனிதமானவன். ராமன் பிறந்த இடத்தில் மறுபடியும் கோவில் கட்டவேண்டும். மறுபடி பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் கோவில் கட்டுவோம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது.

ராமனையே நம்பி இருந்த கட்காரி, கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேறப் போகிறார். ராமன் அவருக்கே கைகொடுக்கவில்லை. ராமன் கைக்கொடுக்காததோடு மட்டுமல்ல, வருமான வரித்துறையினரும் அங்கே செல்ல விருக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவருகிறது.

ஆகவே, ராமனுக்கே இப்போ திண்டாட்டம்; ராமனை ஆதரித்தவர்களுக்கும் திண்டாட்டம்தான்.

ராமன் பாத்திரம் என்று எடுத்துக்கொண்டால், அவன் பெயரில்  தேசிய சின்னம் வைக்க வேண்டு மாம். கேட்டால், ஒரே வார்த்தை சொல்கிறார்கள் நம்பிக்கையாம். பதினேழேகால் லட்சம் ஆண்டு களுக்கு முன்னால் இந்தப் பாலம் கட்டினார்களாம்; மனிதனே அப்போது இல்லை என்று எழுதி யிருக்கிறாரே நம்முடைய பேராசிரியர் அவர்கள்.

இந்தப் புத்தகத்தில் உலகத்தில் முதல் பாலம் எப்பொழுது கட்டினார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்களே!

அப்பேர்ப்பட்ட ஒரு நிலையில், சில ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால்தான் முதல் பாலம் கட்டப்பட்டது.

இராமாயண விமர்சனம்

ராமனை வால்மீகி எப்படி பார்த்தார்? வால்மீகி தானே அடிப்படையானவர். வால்மீகிக் கதையி லிருந்துதானே மற்ற கதையெல்லாம் வந்தது. அந்த வால்மீகி ராமனை எப்படிப் பார்த்திருக்கிறார் - எப்படி பிறந்தார் என்று சொல்லும்பொழுது,

நாசுக்காக நாகரிகத்தைக் கருதி நம்முடைய அருணன் அவர்கள், அமிர்தலிங்கம் அய்யர் அவர்கள் எழுதிய அந்தப் புத்தகம் இருக்கிறதே (நம்முடைய ஏ.பாலசுப்பிரமணியம் அவர்களு டைய தந்தையார் அவர்களுடைய புத்தகம்) அதிலே ராமாயண விமர்சா என்ற புத்தகத்தைப் பற்றி சொன்னார்கள் அல்லவா, அதில் சொல்லுவார்கள்;

ராமன் பிறப்பு என்று சொல்லும்பொழுது குதிரைகள், புத்திரகாமேஸ்டி யாகம், அஸ்வமேத யாகம், குதிரையை வெட்டி, கட்டிப்பிடித்து, பிறகு அந்தப் புரோகிதர்களுடன் இணைந்த பிறகுதான் இவர்கள் பிறக்கிறார்கள் என்று எழுதிய செய்தியை - அப்படியே வால்மீகி ராமயணத்தினுடைய பகுதியை - அமிர்தலிங்க அய்யர் அவர்கள் சமஸ் கிருதத்திலிருந்து மொழி பெயர்த்துவிட்டு, வால்மீகி ராமயாணத்திலே எழுதிவிட்டு, அடுத்த வரியில் என்ன எழுதுகிறார் என்று சொன்னால்,

நாகரிகம் வளர்ந்து வெட்கப்படக் கூடிய சூழ்நிலை வந்தவுடனே, கடவுளைப்பற்றி, அவ தாரத்தைப்பற்றி எழுதும்போது இவ்வளவு அசிங்க மான சூழ்நிலை வருகிறதே என்று அருவருப்பு அடைகின்ற காரணத்தால்தான்,

Later on they Introduced the Payasa theory என்று எழுதினார். அதுதான் மிக முக்கியம். பாயாசம் குடித்ததினால் கருத்தரித்தார்கள். யாகத்திலிருந்து ஒரு பூதம் வந்தது, உடனே பாயாசம் குடித்தார்கள், கருத்தரித்தார்கள் என்று மாற்றி எழுதிக் கொண் டனர்.

பாயாசம் குடித்தால் கருத்தரிக்க முடியுமா?

பாயாசம் குடித்து கருத்தரித்தார்கள் என்று சொன்னால், யாராவது ஒப்புக்கொள்வார்களா? இன்றைக்கு அறிவியல் காலமா, இல்லையா?
பாயாசம் குடித்ததினால் கருத்தரித்தேன் என்று எந்த மருத்துவமனையிலாவது சொல்ல முடியுமா?

பாயாசம் என்ன நேரே கருப்பைக்குச் செல்லுமா? உடற்கூறு தத்துவம் தெரிந்தவர்கள் இதனை நம்ப முடியுமா?

வாயால் குடிப்பது பாயாசம். கருத்தரிப்பு எப்படி நடைபெறும் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கும்பொழுது பாயாசம் குடித்து எப்படி கருத்தரிக்க முடியும்?

அதுவே ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்லவா - இதனை சிந்திக்க வேண்டாமா?

ராமன் யோக்கியனா?

ராமன் பெண்களிடம் நடந்துகொண்டது யோக்கியப் பொறுப்புள்ள ஒரு காரியமா?

எந்தப் பெண்ணாவது இன்றைக்கு ராமனை ஒரு மனிதாபிமானி என்று ஒப்புக்கொள்ள முடியுமா?

யாரோ ஒருவன் சொல்கிறான், மனைவியைப் பற்றி பேசுகிறான் என்பதால், நெருப்பில் மனைவியை குதிக்கச் சொல்லி, நீ கற்புக்கரசிதான்; உன் கற்பு கெடவில்லை என்றால், நீ அக்கினிப் பரிட்சை நடத்தவேண்டும் என்று சொன்னார்.

சீதாபிராட்டியும் நெருப்பில் குதித்து, கற்புக்கரசி தான் என்று வெளியில்  வந்துவிட்டார்கள் என்று கதை எழுதி வைக்கிறான்.

கடவுள் அவதாரத்திற்கு ஞானதிருஷ்டி இல்லையா?

இன்றைக்கு யாராவது அக்கினிப் பரீட்சை நடத்த விடுவார்களா? இது பண்புள்ள ஒரு செயலா?

இவனே கடவுள் அவதாரம் என்று சொல் கிறார்கள்; கடவுள் அவதாரத்திற்கு ஞானதிருஷ்டி இல்லையா?

ராமன் நினைத்திருந்தால், ராவணனிடம் சீதை எப்படி இருந்தாள் என்று தெரிந்துகொள்ள முடியாதா?

சந்தேகம் வந்தால், ஒரேயடியாக தண்டனை கொடுத்திருக்கலாமே? அதற்காக நெருப்பில் குதித்து வெளியே வரவேண்டும் என்று சொல்லலாமா?

இன்றைக்குப் புராதன சின்னம் என்று சொல்கிறார்களே, இன்றைக்கு யாராவது அக்கினி பரீட்சையை நடத்த முடியுமா? என்னதான் சீதாபிராட்டியாரை கும்பிடக்கூடியவர்களாக இருந்தாலும், ராமயாணத்தைப் பாராட்டக் கூடியவராக இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவராக இருந் தாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏன் உமாபாரதியாக இருந்தாலும்கூட யாராவது நெருப்பிலே குதித்துவிட்டு வா என்று சொன்னால், உடனே போகிறேன் என்று சொல் வார்களா?

முதலில் நீ நெருப்பில் விழு என்று சொல்வார்கள்

அந்த மாதிரி இன்றைய தம்பதியரிடையே நடைபெற்றால், என்னைப்பற்றி ஊரில் பேசுவதை விட, உன்னைப்பற்றித்தான்  அதிகம் பேசுகிறார்கள். முதலில் நீ நெருப்பில் விழுந்து காட்டு; பிறகு நான் நெருப்பில் குதிப்பதற்குத் தயாராய் இருக்கிறேன் என்று கேட்பதுதானே அறிவுடைமை.

அதுமட்டுமல்ல;  சாபத்தால், கற்பிழந்த அக லிகை கல்லாய்ப் போனாள். ராமனுடைய பாதம் பட்டதால், அகலிகைக்கு சாப விமோசனம் அடைந்து உடனே எழுந்து விடுகிறாள்.
இவர் கால் பட்டாலே சாப விமோசனம் கிடைக்கும்பொழுது, சீதையை ஏன் நெருப்பில் குதித்து வெளியே வா என்று கேட்க வேண்டும்?

பெரிய வீராதி வீரன் ராமன்; ஒரு சுத்த வீரன் ராமன் என்று சொல்ல முடியுமா?
மரத்தின்பின் நின்று மறைந்து நின்று வாலியைக் கொல்கிறான் கதைப்படி!

சக்கரவர்த்தி திருமகன் எழுதிய ராஜ கோபாலாச்சாரியார், பல ராமாயணங்களிலிருந்து ஒட்டுப் போட்டு - சரிப்படுத்தி எழுதினார்.

அவர் எழுதியதைப் படித்துப் பார்த்தீர்களே யானால், வாலி வதம் என்ற பகுதியில் எழுதி யிருக்கிறார்,

ஆண்டவன் அவதாரமாகிய ராமன் மறைந்து நின்று ஏன் வாலியைக் கொன்றான் என்பதற்குப் பல பேர், பலவிதமான சமாதானங்களைச் சொல் கிறார்கள்; ஆனால், அது எனக்கு அவ்வளவு சரி யென்று படவில்லை; அந்த இடத்திற்கு நாம் அதிகம் போகவேண்டாம் என்று  இதோடு விட்டுவிடுகிறேன் என்று எழுதியிருக்கிறார்.

எனவே, ராமன் வீரனா? ராமன் மனிதாபி மானியா? ராமன் பெண்களிடத்திலே ஒழுக்கமாக, யோக்கியமாக நடந்துகொண்டவனா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

-தொடரும்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஹங்கேரி - இராமாயணம்


வார்சா ஒப்பந்தநாடுகளில் இராமாயண நாடகத்தை நடத்துவது இந்தியாவிற்கு நீண்டகாலமாக நற்பெயரை தரக்கூடிய வழிமுறையாக இருந்ததாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரியர்கள் இராமாயண நாடகத்தை நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமென்று கருதி, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளையே கவரும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய இராமாயண நாடகத்தை தயாரித்தார்களாம்.
இந்த நாடகத்தில் இராவணன் வில்லனல்ல. மாறாக இலட்சுமணன் தான் வில்லன். இவன் நம்பிக்கைத் துரோகம் செய்து தன் அண்ணன் மனைவி சீதையை கூட்டிக் கொண்டு ஓடுவதாகக் கதை. இந்த நாடகம் ஹங்கேரியிலுள்ள புடா பெஸ்ட் நகரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.
மேலும் புதிய டியூட் டானிக்கின் புராண மொழி பெயர்ப்பின்படியும் சமீபத்தில் ஜெர்மானிய ஜனநாயக குடியரசு சார்பில் பெர்லினில் நடந்த நாடகத்திலும், இராவணன் சீதை மீது விருப்பமில்லாதவனாகவும், சீதை வலிய சென்று இராவணனை மயக்கக் கூடியவளாகவும் சித்தரித்திருக்கிறார்களாம்.
ஆதாரம்: இந்துஸ்தான் டைம்ஸ் - 4.10.1981

-விடுதலை,30.1.15,பக்-7

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

இராமயண காலம் - பொய்

-தந்தை பெரியார்
    இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.
புத்தர் பிறந்து இன்றைக்கு 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங் களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(
அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)
2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(
மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)
3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(
சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)
4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(
கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)
5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத் தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(
அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)
21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும்.
-விடுதலை,6.2.15,பக்-7