பக்கங்கள்

வெள்ளி, 10 ஜூலை, 2015

சீதை இராமனுக்குத் தங்கை!

      
இராமாயணம் எத்தனை இராமாயணம்!
சீதை இராமனுக்குத் தங்கை!
இராமனுக்கு நான்கு மனைவி!
- மஞ்சை வசந்தன்

இராமன் சீதை இருவரும் ஒருதாய் பிள்ளை. அதாவது அண்ணன் தங்கை என்று பவுத்த இராமாயணத்திலும், பம்ப இராமாயணத்திலும், ஜைன இராமாயணத்திலும் எழுதப்பட்டுள்ளது!
இன்னுமொரு இராமாயணத்தில் சீதை இராவணனின் மகள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இராமன் பல பெண்டிரைத் திருமணம் செய்தான் என்று ஜைன இராமாயணம் சொல்கிறது. 1.சீதை, 2.பிரபாவதி, 3.ரதினிபா, 4.ஸ்ரீதாமா என்ற நால்வரும் இராமனின் மனைவியர் என்கிறது இந்த இராமாயணம்.
இலட்சுமணனுக்கு எட்டு மனைவி
இலட்சுமணனுக்கு எட்டு மனைவிகள் 250 பிள்ளைகள் என்கிறது ஜைன இராமாயணம். விசல்யா, ரூபவதி, வனமாலா, கல்யாண மாலிகா, ரத்தினமாலிகா, ஜீதபத்மா, பாக்கியவதி, மனோரமா என்ற எட்டு மனைவிகள் என்று விவரிக்கிறது.
ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸ அய்யங்கார்
இவர் 1.ஜைன இராமாயணம், 2.பௌத்த இராமாயணம், 3.யவன இராமாயணம், 4.கிறிஸ்துவ இராமாயணம் என்ற நான்கு இராமாயணங்களை ஆய்வு செய்து 1928இல் இதர இராமாயணங்கள் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.
இருபத்து நான்கு இராமாயணம்
நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் இறுதியில் 24 இராமாயணங்கள் நிலைக்கின்றன.
பவுத்தர்கள் பிராகிருத மொழியிலும், இந்துக்கள் வடமொழியிலும், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளிலும் இராமாயணம் எழுதியுள்ளனர்.
கி.பி.முதல் நூற்றாண்டில் விமலசூரி என்பவர் இராமாயணத்தை பவுமசகியம் என்ற பெயரில் எழுதினார்.

அதன்பிறகு சவுமியன், சுயம்புவன், குணபக்த ராச்சாரியன், ரவிசேனன், தேவச்சந்திரன், பிரவரசேனன் என்ற சமணர்கள் இராமாயணத்தை எழுதியுள்ளனர்.
பவுத்தர்கள் தசரத ஜாதகம், சாம ஜாதகக் கதை, செச்ந்திர ஜாதகம், சம்புல ஜாதகம், இலங்காவதார சூத்திரம் என்ற இராமாயண கதைகளை எழுதியுள்ளனர்.
7ஆம் நூற்றாண்டில் ரவிசேனன் மகாராமாயணம் எழுதினார். கி.பி.12ஆம் நூற்றாண்டில் திரிசஷ்டிகாலக்கா என்ற பெயரில் இராம கதையை எழுதினார்.
கி.பி.16ஆம் நூற்றாண்டில் தேவ விஜயர் இராம சரிதம் எழுதினார்.
இராமாயணம் என்பது கற்பனைக் கதை. உண்மை நடப்பாயிருந்தால் ஒரே மாதிரி இருக்கும். கற்பனை என்பதால் கண்டபடியிருக்கிறது! பலவிதமாக இருப்பதே பொய் என்பதற்கான ஆதாரம்.
தந்தை பெரியாரின் இராமாயண ஆய்வு
தந்தை பெரியார் அவர்கள் இராமாயணக் குறிப்புகள், இராமாயண பாத்திரங்கள் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்கள். இவை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட இராமாயணத்தைத்தான் இந்தியா முழுக்கப் பரப்பி மதவெறியைத் தூண்டப் பார்க்கிறது மதவெறிக் கூட்டம்.
இந்த இராமனைத்தான் இந்தியாவின் ஏகக் கடவுளாக ஆக்கப் பார்க்கிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும்கூட அதை ஏற்க வேண்டும் என்கின்றனர்.
வடநாட்டில் தடம் பதிக்கும் பெரியார்
அறிவியலின் உச்சத்தில் உலகம் சென்று கொண்டிருக்கையில் நாட்டை 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துத் தங்களின் மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம்.
இச்சூழலில் தந்தை பெரியாரின் தேவை வடபுலத்தாரால் உணரப்பட்டு பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்படுகிறது.
வடநாட்டு பத்திரிகைகள் தந்தை பெரியாரின் தேவையை வலியுறுத்தி எழுதுகின்றன. ஆரிய ஆதிக்கம் வீழ்த்தப்பட, மதச்சார்பற்ற நெறி பின்பற்றப்பட தந்தை பெரியாரின் கொள்கைகள் முதற்கட்டமாக  இந்திய மயமாக்க வேண்டியது இன்றியமையாக் கடமையாகும்.

-உண்மை இதழ், 1.7.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக