பக்கங்கள்

வெள்ளி, 7 டிசம்பர், 2018

இராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (1)


17.11.1929 - குடிஅரசிலிருந்து...

இராமாயணம் என்னும், ஒரு பார்ப்பனியத் திற்கு ஆதாரமான புராணத்தை பார்ப்பனர்கள் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய மகாவிஷ்ணு என்பவரின் அவதாரமாகிய ராமன் என்னும் ஒரு கடவுளின் சரித்திரமென்றும், அதில் கண்ட விஷயங்கள் எல்லாம் அப் படியே நிகழ்ந்தது என்றும், அந்த ராமன் நடந்துகொண்டதாக அப்புராணத்தில் சொல் லப்பட்ட விஷயங்கள் எல்லாம் கடவுளால் உலக நன்மையின் பொருட்டு துஷ்டநிக்கிரகம் சிஷ்ட பரிபாலனத்திற்காக நடத்தப்பட்ட உண் மையான நடவடிக்கைகள் என்றும், இந்திய மக்களுக்குப் பார்ப்பனர்களால் போதிக்கப் பட்டு  ஒரு பார்ப்பனரல்லாத வித்துவானைக் கொண்டு அந்த புராணத்தை அதுபோலவே, அதாவது ராமன் கடவுள் அவதாரம் என்ற கொள்கைப்படியே, ஒரு காவியம் பாடச் செய்து, அதை வழக்கத்திலும், நித்திய வாழ்க்கையிலும் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் புண்ணியம் என்றும் மோட்சம் தரத்தக்கதென்றும் சொல்லி ஏமாற்றி, இந்திய மக்களைத் திண்ணைகள்தோறும் இராமாயண காலட்சேபமும் சீதா கல்யாண உற்சவமும், பட்டாபிஷேக உற்சவமும் செய்யச்செய்து, அதனால் ஏற்படும் வருமானம் எல்லாம் பார்ப்பனர் குதிருக்கே போய்ச் சேரும்படியும் செய்துகொண்டு வந்திருப்பதுடன், அந்த இராமாயணக் கதையில் சொல்லியுள்ளபடியே இராமாயணத்தில் வரும் ராமனுக்கு ஒரு ஆயிரம் கோயில்களும், லட்சுமணன், பரதன், சத்துருக்கணன் ஆகியவர்களுக்கு ஆளுக் கொரு ஆயிரமாயிரம் கோயில்களும் அனுமா ராகிய குரங்குக்கு ஒரு பதினாயிரம் கோயில்களும், மற்றவைகளுக்கு நகை என்றும், வாகனம் என்றும் மண்டபம், சப்பரம், தேர் என்றும் மேளம், தாளம், தாசி, பூஜை உற்சவம் என்றும், மற்றும் இவை போன்றவைகளுக்கு என்றும் முதலாகியவைகளுக்கு வருஷம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்வதும் இவற்றில் பெரும்பகுதி பார்ப்பனத் தொந்தியில் விழும்படியாகவும் செய்து, மற்றும் வீடுகள் தோறும் ராமன் படமும், சீதை படமும், அனுமான் படமும், சுவர்களில் தொங்க விட்டு, அதற்கு புஷ்பம், கற்பூரம், தேங்காய், பழம் பூஜையும் நடந்து வரும் படியாகவும் செய்யப்பட்டு இன்றைய தினமும் வழக்கத்தில் நடந்தும் வருவதை எவரும் மறுக்க முடியாது. இது மாத்திரமல்லாமல் ராமன் பிறந்த ஊர் என்றும், அவன் ஆண்ட ஆட்சிகள், தர்மம் என்றும், அவன் கட்டின பாலமென்றும், அவன் கும்பிட்ட சாமி என்றும்,  பல இடங்களையும் கற்பனை செய்து, அவற்றிற்கும் மகத்துவம் கொடுத்து மக்கள் அணுகிச் செல்வதும், அவைகளைப் பார்ப்பதும் புண்ணியம் என்றும் மோட்சம் என்றும் இஷ்ட சித்தியாகம் என்றும் சொல்லி நம்பச் செய்து, அதன் மூலமாகவும், மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயும் செலவு உண் டாக்கப்பட்டு வருகின்றதையும் யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

இவை மாத்திரமல்லாமல், ராமன், லட்சுமணன், சீதை முதலியவர்களுக்கு பார்ப்பன அடையாளமும், மற்ற, அதாவது இராவணன், கும்பகர்ணன், தாடகை, சூர்ப் பனகை முதலியவர்களுக்கு பார்ப்பனரல்லா தார் அடையாளமும் பெயர்களும், அது போலவே, அருவருக்கத்தக்கதாகவும் கெட்ட கருத்துக்கள் கொண்டதாகவும் கற்பித்து அவற்றை தேவர் அசுரர் என்பது போலவும், பிராமணர் சூத்திரர் என்பது போலவும் கருத் துக்களையும் ஏற்றி அதாவது இப்போது பார்ப் பனர்கள் என்பவர்கள் எல்லாம் தேவர்களைக் கருதும்படியும், இப்போது அவ்வொழிந் தவர்கள் அசுரர்களாகக் கருதும்படியும் சூழ்ச்சி செய்து, அதையும் நமது மக்கள் மனத்திற்குள் புகுத்தி விட்டார்கள்.

எனவே இப்பேர்ப்பட்ட புரட்டுகளையும் அயோக்கியத்தனங்களையும் பெரும்பான் மையான நம்மக்களுக்கு ஏற்பட்ட இழிவையும் ஒழிக்கக் கருதி, மேற்கண்ட மாதிரியான மூடநம்பிக்கையிலும், பாமரத் தன் மையிலும் ஈடுபட்டு நஷ்டமடைந்து மானமற்று மிருகங் களிலும் கேவலமாய் பிழைக்கும் மக்களின் மடமையை நீக்க வேண்டுமென்ப தாய் இராமாயண ஆராய்ச்சி என்றும், இரா மாயண புரட்டு என்றும், இரா மாயண ஆபாச மென்றும், இராமாயண இரகசியமென்றும், மற்றும் பலவிதத் தலைப்புகளின் கீழ் அப்புரட்டுகளைச் சுயமரியாதை உணர்ச்சி யுள்ள பல பெரியோர்களும் அறிஞர்களும் கொஞ்ச காலமாய் வெளிப்படுத்தி வரும் விஷயங்கள் யாவரும் அறிந்ததாகும்.

இவ்வித வெளியீடுகளுக்கு நாட்டில் ஏற்பட்டஎதிர்ப்புகளும், தடைகளும் கொஞ்சமல்லவென்பதும் பொதுமக்கள் உணர்ந்ததே யாகும்.

அவர்கள் இதுவரை இராமாயணத் தினால் ஆதிக்கம் பெற்று வயிறு வளர்த்து வரும் பார்ப்பனர்களும் அவர்களது புல்லுரு விகளும் கூலிகளும் செய்து வந்த எதிர்ப்புகள் என்ன என்றால், இராமாயணத்தைக் குற்றம் சொல் லுவது மகாபாதகம் என்றும், அது கடவுள் நிந்தனை என்றும் மதத்துரோகம் என்றும், இராமனை கடவுளாக வணங்கும் இந்துக்கள் மனம் புண்படுகின்றது என்றும், மற்றும் பலவிதமான தந்திரவார்த்தைகளையும், மருட்டு வார்த்தைகளையும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றிவந்தார்கள்.

,இந்நிலையில் அவைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டு மென்று கருதியே இராமா யணம் நடந்த கதை என்று நம்புபவர்களுக்காக அப்படி நடந்திருக்க முடியாது என்பதற்குள்ள பல காரணங்களையும், இராமன் கடவுள் என்று நம்புபவர்களுக்கு, அவன் கடவுளாயிருக்க முடியாது என்பதற்கு பல காரணங்களையும், இராமாயணம், தேவர்கள், அசுரர்கள் சண்டை என்று நம்புகின்றவர் களுக்கு அது தேவர்கள் அசுரர்கள் கதை அல்லவென்பதற்கு பல காரணங்களையும் சொல்லி வருவதோடு, எதற்கும் அசையாமல், குரங்குப்பிடியாய் இராமன் கடவுள் என்றும், இராவணன் அசுரன் என்றும், மற்றும் அதில் கூட ராமன் வடதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், இராவணன் தென்தேசத்துக்காரன் என்றும், வடக்கே இருந்து தெற்கே வந்து சண்டை போட்டான் என்றும், மற்றும் இதிலிருந்து வடதேசத்து ஆரியர்கள் தேவர் களாயிருக்கக் கூடும் என்றும், தென்தேசத்துத் திராவிடர்கள் அசுரர்களாயிருக்கக் கூடும் என்றும், நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தி, அவர்களது மடமையைப் போக்க வேண்டி அதற்குத் தகுந்தபடி பல காரணங்களையும் காட்டிப் பேசியும் எழுதியும் வரப்படுகின்றது.
-  விடுதலை நாளேடு, 7.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக