பக்கங்கள்

திங்கள், 21 ஜூலை, 2025

துளிசிதாஸ்’ ஹிந்தி இராமாயணம் படிக்கச் சொல்லும் சூட்சமம் புரிகிறதா?

 


மனுவாதிகளான இராமாயண பக்தர்கள் துளிசிதாஸ் இராமாயணம் படிக்கச் சொல்வது எதனால் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மண்டல் கமிஷன் பரிந்துரை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு – நிறைவேற்றிய அறிக்கையின் 16ஆம் பக்கத்தில் உள்ள சில வரிகளைப் படியுங்கள்.
‘இரகசியம்’ புரியும்!
“Mythology and scriptures were also pressed into service to establish the inherent superiority of the Brahmin and the low social ranking of the Shudras. For instance, Tulsidas states in his Ramayana, that means
Venerate a Brahmin even if he is devoid of all virtue, but not a Shudra even if he is packed with virtue and knowledge.’’
– (மண்டல் கமிஷனிலிருந்து..)
இதன் தமிழாக்கம்:
‘‘ஒழுக்கங் கெட்டவன் பிராமணன் ஆனாலும் அவனை வணங்கு; அதிக ஒழுக்கமுள்ளவன் சூத்திரனானாலும் அவனை வணங்கவே கூடாது’’
அது மட்டுமல்ல.
‘பெண்களும், மேளங்களும் அடிக்கப்படவே உண்டாக்கப்பட்டவை’’
– துளசிதாஸ் இராமாயணம்

மனித தர்மம், சமத்துவம் விரும்புவோரே,
இதுதான் பரப்பப்படுகிறது. மதச் சார்பற்ற ஒரு ஜனநாயகத்தில் இது நியாயமா?
சிந்தியுங்கள் மக்களே!
இராமாயண பக்திப் பரப்பப்படுவதின் நோக்கம் புரிகிறதா?

- விடுதலை நாளேடு, 6.4.25

செவ்வாய், 13 மே, 2025

வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம் - செ.ர.பார்த்தசாரதி

 

புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் வடமொழியில் எழுதப்பட்ட ‘வால்மீகி இராமாயணம்’ தான் முதல் இராமாயணமாக கருதப்பட்டு வருகிறது.

நம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நிலப்பரப்பு, சுற்றிலும் கடல் சூழ்ந்து உள்ளது. இந்தப் பகுதியில் ‘இராமநாதசுவாமி கோயில்’ என்று ஒன்று பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கட்டடக்கலையை வைத்து கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்த இராவணனை இராமன் கொன்றுவிட்டு, ‘புஷ்பக விமானம்’ மூலம் அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இறங்கி, இராவணனை கொன்ற ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்குவதற்காக, இராமன் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ததாகவும்; அதுவே பிறகு இராமநாதசுவாமி கோயில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.


‘பிரம்மஹத்தி தோஷம்’ என்றால் என்ன?

பிராமணர்கள் எனப்படும் பார்ப்பனர்கள் பிரம்மாவின் தலை பகுதியில் இருந்து தோன்றியவர்களாம்!

மற்றவர்கள் பிரம்மாவின் மற்ற பகுதிகளில் இருந்து தோன்றியவர்களாம்!

பார்ப்பனர்கள் மட்டுமே அனைத்து உரிமைகளும், தகுதியும் பெற்றவர்களாகவும்

மற்றவர்கள் விலங்குகளை போன்றவர்களாகவும் வேதங்கள் சித்தரிக்கின்றன.

ஆகையால் சூத்திரர்களைக் கொன்றால் எந்த பாவமும் கிடையாது. அதாவது ஒரு உயிரை கொன்றதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் பார்ப்பானை கொன்றால் உயிரைக் கொன்றதாக ஆகிவிடும். அதனால் கொன்றவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ என்ற பாவம் சூழ்ந்து விடும்.

இந்த பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்களை ‘பிரம்ம ராட்சஷ பிசாசு’ என்ற பிசாசு பின் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வரும். இந்த தோஷம் நீங்க வேண்டுமானால் அதற்கான நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும்.

இந்தப்படி தான் (புராணப்படி) பிராமணனான இராவணனை இராமன் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை உண்டாக்கி அதற்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

பல மதங்கள் தோன்றி பிறகு 6 மதங்களாக நிலைத்தன. (சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், காணாபத்தியம்)

இந்த ஆறு மதங்களும் தங்கள் தங்கள் மதங்களுக்கு ஒருவரை முழுமுதற் கடவுளாக பரிந்துரைக்கின்றன. அதாவது பரப்பிரம்மம்(மகாதேவ்).

இதில் சைவமும் வைணவமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என

இன்று வரை போட்டி போட்டுக் கொண்டுள்ளன.

சைவ புராணங்களில் வைணவத்தை இகழ்ந்தும்; வைணவ புராணங்களில் சைவத்தை இகழ்ந்தும் எழுதப்பட்டுள்ளன.

‘சிவன் தான் முழு முதற்கடவுள். இராமனே சிவனை வழங்கினான்’. என பரப்புவதற்காக தான் இந்த இராமேஸ்வர இராமநாதசுவாமி கோயில் கதை ஆகும்.

வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ‘இராமேஸ்வரத்தை பற்றியோ! ‘இராமன் சிவலிங்கத்தை வணங்கினான்’ என்பதை பற்றியோ குறிப்பு கிடையாது.

இராமன் ‘மகேந்திர கிரி’ (மகேந்திர பர்வதம்) மலையின் மேலிருந்து, மலையின் அடிவாரத்தை கடலின் அலைகள் தொட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததாகவும். பிறகு அடிவாரத்திற்கு வந்து, பாலத்தைக் கட்டி இலங்கை சென்றதாகவும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது.

இராமேஸ்வரத்தில் எந்த மலையும் கிடையாது. இராமேஸ்வரத்தில் மட்டுமல்ல இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எந்த மலைகளும் கிடையாது. இந்த ‘மகேந்திர கிரி’ என்ற மலை, ஒடிசாவில் உள்ளது.

ஒடிசாவை பற்றி கூறிய கதையை தமிழ்நாட்டில் நடந்ததாக கூறுவதே ஒரு பெரிய புரட்டாகும்.

இராவணனை கொன்றுவிட்டு இலங்கையிலிருந்து ‘புஷ்பக விமானம்’ மூலம் ‘அயோத்தி’ திரும்பிய போது, நடந்த நிகழ்வுகளின் இடங்களை சீதைக்கு காட்டிக் கொண்டே வருவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகிறது. இடையில் இராமேஸ்வரத்தில் இறங்குவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படவே இல்லை.

காளிதாசர் இயற்றிய ‘இரகு வம்சம்’ என்ற காவியத்திலும் ‘இலங்கையில் இருந்து அயோத்தி நோக்கி இராமரை சுமந்து கொண்டு புறப்பட்ட புஷ்பக விமானம், இடையில் எங்கும் இறங்காமல் அயோத்தியில் தான் இறங்கியது.’ என்று கூறப்பட்டுள்ளது.

(ரகுவம்ச மஹா காவ்யம்,13ஆவது சர்க்கம்)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்படாத ஒரு நிகழ்வை, ‘மகாவிஷ்ணுவிற்கே ஈஸ்வரன் தான் கடவுள்’ என்று சொல்வதற்காக சைவர்கள், பிற்காலத்தில் சில புராணங்களை இயற்றி அதில் இராமாயணத்தை புகுத்தி சில திருத்தங்களை செய்து விட்டார்கள்.

சிவமகா புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் என்கின்ற சிவனை புகழும் புராணங்களில் இந்த புகுத்தல் வேலை நடைபெற்றுள்ளது.

பத்ம புராணத்தில் ‘பூர்வ கல்ப இராமாயணம்’ என்ற பெயரிலும், பிரம்மாண்ட புராணத்தில் ‘அத்தியாத்ம இராமாயணம்’ என்ற பெயரிலும் இராமாயணங்கள் உள்ளன.

இந்தப் ‘பூர்வ கல்ப இராமாயணத்’தில்

இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இராமன் இறங்கி, இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக, சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது.

(பத்ம புராணம், பூர்வ கல்ப இராமாயணம், பக்கம்-424, தாமரை நூலகம் வெளியீடு)

ஆனால் அதே ‘பத்ம புராணத்தில்’

‘மனிதர்கள் மோட்சம் அடைவதற்கான வழிகள்’ என்று விரதங்களையும் யாகங்களையும் பற்றி கூறும் போது, ‘பிராமணனை கொல்ல நேர்ந்ததைப் பற்றி சிறீ ராமபிரான் வருத்தம் அடைதல்’ என்ற தலைப்பில் (பக்கம்-364) ‘இராமன் பிராமணனான இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்க என்ன வழி’ என்று அகத்தியரை கேட்டதாகவும்; அகத்தியர், ‘அஸ்வமேத யாகம் நடத்தினால் பாவம் போகும்’ என்று கூறியதாகவும்; அதன்படி அஸ்வமேத யாகத்தை இராமன் நடத்தியதாகவும்’ உள்ளது.

ஒரு இடத்தில் இராவணனை கொன்ற பாவம் தீர, இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை நிறுவி சிவ வழிபாடு செய்ததாகவும், அதே புராணத்தில் இன்னொரு இடத்தில் ‘அஸ்வமேத யாகம்’ நடத்தி, இராவணனை கொன்ற பாவத்தை போக்கிக் கொண்டதாகவும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்படுகிறது.

‘அத்தியாத்ம இராமாயணத்’தில் இராமேஸ்வரத்தின் கடற்கரையில் சிவலிங்கத்தை வழிபட்டுவிட்டு தான், இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(அத்தியாத்ம இராமாயணம், நான்காவது சர்கம், பக்கம்-467, தாமரை நூலகம் வெளியீடு)

அதேபோல் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் புறப்பட்டு அயோத்தி செல்லும் வழியில் சீதைக்கு, தான் நிறுவிய சிவலிங்கத்தை காட்டிச் சென்றதாக, கூறப்பட்டுள்ளது.

சிவமஹா புராணத்தில், ‘சிறீ ராமர் பெற்ற வரமும் இராமேஸ்வரம் மகிமையும்’ என்ற தலைப்பிலான பகுதியில், தெற்கு கடற்கரை(இராமேஸ்வரம்)யில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு, சிவனிடமிருந்து, வலிமையானவனான இராவணனை கொல்ல வரம் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(சிறீ சிவமஹா புராணம், முதற் பாகம், பக்கம் -248, பிரேமா பிரசுரம் வெளியீடு)

கந்தபுராணத்தில் பார்வதி நாதரை பூஜித்து பாசுபதாஸ்திரத்தை வரமாக பெற்றுக்கொண்டு இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.

(சிறீ கந்தபுராணம், இரண்டாம் பாகம், உபதேச காண்டம் பக்கம்- 454, பிரேமா பிரசுரம்)

இராமன் (மகாவிஷ்ணு) கடவுள் அல்ல, சிவன் தான் கடவுள் என்று நிறுவுவதற்காக சைவர்களால் உண்டாக்கப்பட்டது தான். இராமேஸ்வர இராமநாதசாமி கோயில் கதையும், அதற்கு ஆதாரமாக புனையப்பட்டதே பத்ம புராணமும், பிரம்ம புராணமும், சிவமகா புராணமும் ஆகும்.

இது ஒரு புறம் இருக்க பராசக்தியை முழு முதல் கடவுளாக (மகாதேவ்) கூறும் ‘சாக்த மதத்’தின் புராணமான ‘தேவி பாகவதம்’ என்ற புராணத்தில் ‘மகாவிஷ்ணுவே (இராமர்) பராசக்தியை வழங்கினார்’ என்று சொல்வதற்காக இராமர் கிருஷ்கிந்தையில் துக்கப்பட்டு கொண்டிருந்தபோது, நாரதர் பராசக்தியை வணங்கி ‘நவராத்திரி விரதம்’ இருக்க கூறுகிறார். அதன்படி நவராத்திரி விரதம் மேற்கொண்டு, பராசக்தி இடம் இருந்து, போருக்கு உடந்தையாக இருக்க ‘சக்தியம்சத்’தை வரமாக பெற்றதாக’ கூறப்படுகிறது.

- எனது கட்டுரை 

வியாழன், 27 பிப்ரவரி, 2025

ராமராஜ்ஜியம்’’ எப்படி இருக்கும்? – தந்தை பெரியார்

 

‘‘ராமராஜ்ஜியம்’’ எப்படி இருக்கும்? – தந்தை பெரியார்

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை, தந்தை பெரியார்

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் – நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி இருப்பதோடு சீக்கிரம் ராமராஜ்ஜியத்தையும் ஏற்படுத்திவிடுவேன் என்பது பொருளாகப் பேசியிருந்ததை சுதேச மித்திரனில் உள்ளபடி ஜூலை 30ஆம் தேதி குடிஅரசில் எடுத்து எழுதி அதைப்பற்றிய நமது கருத்தையும் வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்த வாரத்தில் (6.8.1939) தோழர் சத்தியமூர்த்தியார் ஸ்தாபிக்க முயற்சிக்கும் ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? அதன் கால ஒழுக்கம் என்ன? நீதி என்ன? என்பவைகளைப் பற்றியும் எழுதிவிட்டு அத்தலை யங்கத்தின் முடிவில் அவைகளுக்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் உள்ள வாசகங்களைப் பின்னால் எடுத்துக்காட்டுவோம் என்றும் எழுதி இருந்தோம்.

அது பல காரணங்களால் சென்ற வாரம் எழுதத் தவறிவிட்டதால் பல தோழர்கள் எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்ததாக எழுதி இவ்வாரம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனதுபற்றி சிலவற்றை மாத்திரம் இவ்வாரம் குறிப்பிடுகிறோம்.

ராமன் பிறப்புக்குக் காரணங்கள்
ராமாயண ஆரம்பத்திற்குக் காரணம் காட்டும் போதே ராவணேஸ்வரனால் துன்பமடைந்த தேவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்ததாகவும், மகாவிஷ்ணு அத்தவத்திற்கு இரங்கி, தான் தசரத ராஜனுக்கு மகனாகப் பிறந்து ராவணனைக் கொன்று பதினோராயிரம் வருஷம் அரசாண்டுவிட்டு, பிறகு தேவலோகத்திற்கு வருவதாக வாக்களித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மகாவிஷ்ணு அவதாரமெடுத்தற்குக் காரணம் ராவணனைக் கொல்வதற்கு மாத்திரம்தான் என்று இருக்குமானால் ராவணனை ஏன் கொல்லவேண்டும்? ராவணன் என்ன குற்றம் செய்தான்? என்பவைகளைப் பற்றி முதலில் ஆராயவேண்டியது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், மகாவிஷ்ணு ராமனாகப் பிறப்பதற்குக் காரணம் மற்றொன்று கூறப்பட்டிருக்கிறது. அதுதான் ராமாயண ஒழுக்கத்திற்குப் பொன்மதில் அரண் என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது.

அது என்னவெனில், மகாவிஷ்ணு வானவர் ஒருகாலத்தில் பிருகு மகரிஷியின் பத்தினியைக் கொன்று விட்டாராம். அதற்காக அந்த ரிஷி கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கி, “நீ என் மனைவியைக் கொன்றுவிட்ட கொலை பாதகனானதால் நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இழந்து சீரழிய வேண்டியது” என்று சபித்து விட்டாராம். அதனால் விஷ்ணு ராமனாகப் பிறந்து தனது மனைவியை இழந்து துன்பப்பட்டாராம். இது வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 51ஆம் சருக்கத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு மனிதனாகப் பிறந்தது மனைவியைப் பறிகொடுத்துத் தவித்ததற்கு ராமாயணத்தைவிடப் பழைமையானதும் முக்கியமானதுமென்று கருதப் படுவதாகிய கந்த புராணத்தில் மற்றொரு காரணம் கூறப்பட்டிருக்கிறது. அது என்னவெனில் மகாவிஷ்ணு வானவர் சலந்தராசுரன் மனைவியாகிய பிருந்தை என்பவள் சற்று அழகுடையவளாக இருந்ததால் அவளை எப்படியாவது சேரவேண்டுமென்று கருதிச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாராம். ஆனால், அவ்வசுரன் இடம் கொடுக்காமல் காவல் இருந்ததால் முடியாமல் போய்க் கடைசியாக அவ்வசுரன் சாகும் படியாக ஆன பின்பு அவ்வசுரனுடைய உடலுக்குள் புகுந்துகொண்டு புருஷன் மாதிரியாகவே இருந்து பிருந்தையை அனுபவித்து வந்தாராம். சில நாட்கள் விஷ்ணுவிடம் அனுபவித்த பின்பே அந்த கற்புக்கரசி யாகிய பிருந்தை இவன் தன் புருஷனல்ல, மகாவிஷ்ணு என்று அறிந்து உடனே மகாவிஷ்ணுவை “ஓ விஷ் ணுவே! நீ என்னை எனது இஷ்டமில்லாமல் ஏமாற்றி வஞ்சித்துப் புணர்ந்துவிட்டதால் உன் மனைவியை ஒருவன் வஞ்சனையால் எடுத்துப் போகக்கடவது” என்று சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாய் மனிதராகப் பிறந்து மனைவியை இழந்து துன்பப் பட்டார் என்றும் மேல்படி கந்த புராணம் தக்க காண்டம் 23ஆம் அத்தியாயத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்த பெருமைக்குக் காரணம் மேற்கண்ட இரண்டு மாத்திரமல்லாமல் 3ஆம் காரணமும் ஒன்று இருக்கிறது.

அதாவது, ஒரு பொல்லாத வேளையில் மகா விஷ்ணு மனித உடம்போடு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும், அதுசமயம் பிருகு ரிஷி முதலியவர்கள் அவரைக் காணச் சென்றதாகவும், வேறு சிலர் தன்னைப் பார்க்க வந்த சமயத்தில்கூட தான் புணர்ச்சியை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே அவர்களுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் கோபித்து விஷ்ணுவைப் பார்த்து “ஓ மானம், வெட்கம் இல்லாத விஷ்ணுவே! நீ இம்மாதிரி இழிவான காரியம் செய்ததற்காக நீ உன் மனைவியை இழந்து வருந்தக்கடவை” என்று சபித்ததாகவும் சொல்லப் படுகிறது.

இந்த உண்மை சிவரகசியம் மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலும், அது மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.

ஆகவே, ராமராஜ்ஜியத்தின் மூலபுருஷரும் கடவுள் அவதாரமாக வந்தவருமான ராமனின் பிறப் புக்கே இம்மாதிரியான காரணங்கள் இருக்குமானால் இந்த இப்படிப்பட்ட ராமனுடைய அல்லது கடவுளி னுடைய ஆட்சி ராஜ்ஜிய பாரம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்கூற வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ரிஷி ஜாதிகள் யோக்கியதை
ரிஷிகள் மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் அசுரர்களுடைய மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் எடுத்துக் காட்டப்பட்டதில் இருந்தே ரிஷி ஜாதிகளின் யோக்கியதையும், அசுரர் ஜாதியினுடைய யோக்கியதையும் நன்றாய்த் தெரிவதோடு கடவுள் ஜாதிகளுடைய யோக்கியதையும் பளிங்குபோல் விளங்குகின்றது.

என்னவெனில், ரிஷி பத்தினியை அவள் புருஷ னுக்குத் தெரியாமல் மாத்திரம்தான் கலந்ததாகவும், ஆனால் ரிஷிபத்தினிகள் சம்மதித்து விஷ்ணுவுடன் கலந்து இன்பம் அனுபவித்ததாகவும் விளங்கும்படியாக இருக்கிறது. அசுரர்களு டைய மனைவிகளிடத்தில் அந்த ஜபம் செல்லவில்லை. புருஷன் சாகும்படியாக ஆனபின்பே அதுவும் புருஷன் போல் வேஷம் போட்டு அசுர ஸ்திரீயை ஏமாற்றித்தான் சேர முடிந்ததே ஒழிய மற்றபடி ரிஷி பத்தினிகள் மாதிரி சம்மதம் பெற்றுச் சேர முடியவில்லை. அன்றியும் ரிஷி பத்தினிகள் கற்பழிக் கப்பட்டதற்கு ரிஷிகளால் தான் மகாவிஷ்ணுக்கு சாபம் கொடுக்கப்பட்டதே தவிர, ரிஷி பத்தினியால் சாபம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அசுர ஸ்திரீகளோ வென்றால் தாங்களே விஷயம் தெரிந்த உடனே சாபம் கொடுத்து தண்டிக்கத் தக்க சக்தி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அன்றியும் கடவுள்ஜாதி ஸ்திரீயான திருமகள் அந்நிய புருஷர்கள் வந்து பார்க்கும்போதுகூட கலவி யில் இருந்து நீங்காமல் கலவிசெய்துகொண்டே இருக்கச் சம்மதித்து இருந் தாள் என்றால் அவர்களது தைரியத்தை மெச்ச வேண் டியதென்றாலும் அந்த ஜாதி எவ்வளவு இழிவுக்கும் சம் பந்தப்படக்கூடியது என்பது விளங்காமல் போகாது.

புராணப் பொய்கள்
இந்த உண்மைகள் இயற்கைக்கு மாறானவை என்றாலும் எப்படியோ இருக்கட்டும் நடந்தததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் விவகரிக்க வரவில்லை.

பொதுவாகவே இராமா யணம் மாத்திரமல்லாமல் மற்றும் அதுபோன்ற – கடவுள் சம்பந்தமான சைவ, வைணவ புராணங்கள் பொய்யென்றும், அறிவுக்குப் பொருத்தமில்லாத இழிவான ஒழுக்க ஈனமான விஷ யங்கள் கொண்ட காட்டு மிராண்டிக் காலத்து கட்டுக் கதைகள் என்றும் சொல்லி வருகிறோம். ஆனதால் அவற்றின் உண்மையைப் பற்றியும் வாதாட விரும்ப வில்லை.

ஆனால், தோழர் சத்தியமூர்த்தியார் இப்படிப் பட்ட கதையில் உள்ள இப்படிப்பட்ட சம்பவங்களில் சிக்குண்டவனாகக் காட்டப்பட்டுள்ள ஒரு பாத்திர மாகிய ராமன் என்பவனுடைய பெயரால் இருந்து வரும் கதையில் உள்ள ஒழுக்கங்களையும், நீதி களையும் கொண்ட ஒரு ராஜ்ஜிய பாரத்தை – ராஜ நீதியை இந்தியர்களுக்கு என்பதில் வடநாட்டாருக்குச் சொல்வதைப் பற்றி நமக்கு இப்போது கவலை இல்லை. தென்னாட்டாருக்கு – திராவிடர்களுக்கு – தமிழ் நாட்ட வருக்கு – தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவதும் அதற்காகவே இந்தியையும் – சமஸ் கிருதத்தையும் தமிழ் மக்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதும் இந்தக் காரியத்திற்காகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்திய அரசாட்சிக்கு சர்வாதிகாரியாக ஆகவேண்டும் என்றும் ஆசைப் படுவதாகச் சொல்வதுமாயிருந்தால் அதைத் தமிழ் மக்கள் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறோம்.

ஆரியர் வேறு தமிழர் வேறு என்பதற்கும்; ஆரியநாடு வேறு தமிழ்நாடு வேறு என்பதற்கும் இந்த புராண இதிகாசக் கலைகளே போதாதா என்று கேட்கின்றோம்.

இந்தியாவென்பது எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தேசத்தையோ, ஒரு நாட்டையோ குறிப்பிடும் பெயராகாது என்று முன்னம் பல முறை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். குறிப்பாக இந்த நாட்டுக்குப் பரத கண்டம் என்றோ, பாரததேசம் என்றோ, பாரதத்தாய் என்றோ சொல்லுவது சிறிதும் பொருத்தமற்றது என்பதோடு ஒரு தமிழ் மகன் வாயில் தமிழ் நாட்டைப் பாரதநாடு அல்லது பாரததேசம் என்று சொல்லப் படுமானால், “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் அய்யப்படும்” என்ற திருவள்ளுவரின் திருவாக்குப்படி அப்படிப்பட்டவரது குலத்தைப்பற்றிச் சந்தேகப்பட வேண்டியதைத் தவிர வேறு பரிகாரமில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்மக்கள் திராவிட மக்கள் ஆண்ட நம் தமிழ் – திராவிட நாட்டை என்ன காரணத் திற்கு ஆக ஒருவன் பரதன் (ஆரியன்) ஆண்டதாகச் சொல்லி இதை பரதநாடு என்று சொல்லவேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டிக்கொள்கிறோம்.

நந்தன் தேசம்
தமிழ் நாட்டை ஏன் ஒரு தமிழ் மன்னன் அல்லது ஒரு தமிழன், திராவிடன், ஆட்சியின்பேரால் அழைக்கக்கூடாது என்று கேட்கின்றோம். இந்த தமிழ் நாட்டிற்கு ஒரு ஆட்சி வேண்டுமானால் ஒரு பழங்காலத்து மூவேந்தர்கள் ஆட்சியை ஸ்தாபிக்கப் பாடுபடுகிறோம் என்றோ அல்லது மூவேந்தர்களாலும் கைவிடும்படி செய்யப்பட்ட பிறகு ஒரு நாயக்கர் ஆட்சி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மைச் சரித்திரமானால் அந்த நாயக்கர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ அல்லது முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படுவதில் நேர்மையாக, நீதியாக அரசாட்சி செய்த ஒரு முஸ்லிம் மன்னன் பெயரைச் சொல்லி அவன் ஆட்சியை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறோம் என்றோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் சமுகத்தைச் சேர்ந்த நந்தன் முதலிய அரசர் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படும் சரித்திரம் உண்மையாய் இருக்குமானால் அந்த ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ சொல்லாமல், அவர்கள் பேரால் இந்த நாட்டை அழைக்காமல் பரத தேசமென்றும், ராமராஜ்ஜியம் என்றும், இந்தப் பார்ப்பனர் சொல்லுவதின் அர்த்தம் என்ன என்றும் அதைச் சில தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்தாளம் போடும் இழிதன்மைக்குக் காரணம் என்னவென்றும் கேட்பதோடு இன்று நிறுத்திக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு – தலையங்கம் – 20.08.1939