பக்கங்கள்

வெள்ளி, 21 ஜூலை, 2017

இராமாயணப் பாத்திரங்களின் யோக்கியதை-2

25.12.1943 - குடியரசிலிருந்து...

இராமன் இனி இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.

1. கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். 

2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும் கைகேயிக்கும் குடிகளுக்கும் நல்லபிள்ளையாக நடந்து வந்திருக்கிறான்.

3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சி களுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக்கொள்ள முனைகிறான்.

4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்ளு கிறேன், நீதான் நாட்டை ஆளப்போகிறாய் என்று தாஜா செய்கிறான். 

5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்ற ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான்.

6. நாடு உனக்கு இல்லை. நீ காட்டுக்குப் போகவேண்டும் என்று தசரதன் சொன்னவுடன் மனதுக்குள் துக்கப்படுகிறான். 

7. நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து, காட்டிற்குச் சென்று காய்கறிகளைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே என்று தாயாரிடம் சொல்லி சங்கடப்படுகிறான். (ஆனால், காட்டில் மாமிசத் தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்.) 

8. என் கைக்குக் கிடைத்த இராஜ்ஜியம் போன தோடல் லாமல் நான் காட்டுக்கும் போக வேண்டியதாயிற்றே என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல்லி துயரப்படுகிறான்.

9. எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்துவரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப்பானா என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான்.

10.இராமன் பல மனைவிகளை மணந்து இருக்கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான தோழர் சி.ஆர்.சீனிவாசய்யங்காரும், தோழர் மன்மதநாத்தத்தரும் தெளி வாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாயணத்தில் பல இடங்களில் இராமனின் மனைவிமார்கள் என்றே வாசகங்கள் வருகின்றன.)

11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்துவருகிறான்.

12. கைகேயி தீய குணமுடையவள்.

13. அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்.

14. என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடுவாள் என்று சொல்லி இருக்கிறான். 

15. காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கருதக்கூடிய சம்பவம் ஏற்படும் போ தெல்லாம், கைகேயி எண்ணம் ஈடேறிற்று, கைகேயி திருப்தி அடைவாள் என்று பலதடவை சொல்லி இருக்கிறான்.

16. தனக்கு ஆபத்து வரப்போவதாக நினைத்த மற்றொரு சமயத்தில், இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் எந்தவித எதிர்ப்புகளும் இன்றி சுகமாய் அயோத்தியை ஆளுவான் என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.

17.கைகேயி இராமனிடம், இராமா! அரசர் நாட்டை பரத னுக்கு முடிசூட்டுவதாகவும், நீ காட்டுக்குப் போக வேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார் என்று சொன்னபோது இராமன், அரசர் நாட்டைப் பரதனுக்கு கொடுப்பதாக என்னிடம் சொல்லவில்லையே என்று சொல்லுகிறான்.

18. தந்தையை, மடையன், புத்தியில்லாதவன் என்று சொல்லுகிறான். தந்தையை நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டு கொண்டு இரு; நான் காட்டுக்குப் போய் வந்து விடுகிறேன் என்று சொல்லிப் பரதனுக்கு முடி சூட்டுவதைத் தடுக்கிறான்.

19. எனக்குக் கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரி களைக் கொன்று என்னை அயோத்திக்கு அரசனாக்கிக் கொள்வேன். உலகத்தார் பழிப்பார்களே என்றுதான் சும்மா இருக்கிறேன் என்கிறான். இதனால் இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக் கொள்கிறான்.    அடுத்த வாரமும் தொடரும்...
-விடுதலை,21.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக